நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் விவரம் அறிவிப்பு
1 min read
Notice of Prohibited Words in Parliament
14.7.2022
நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைள் விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
பயன்படுத்தக்கூடாத வார்த்தை
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது. இந்தநிலையில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. அதில் ஆங்கில வார்த்தைகளும், இந்தி வார்த்தைகளும் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுகேட்பு ஊழல், கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளாக சேர்க்கப்பட்டுள்ளன. இரட்டை வேடம், பயனற்றது, நாடகம், ரத்தக்களரி, குரூரமானவர், ஏமாற்றினார், குழந்தைத்தனம், கோழை, கிரிமினல், முதலை கண்ணீர், அவமானம், கழுதை, கண்துடைப்பு, ரவுடித்தனம், போலித்தனம், தவறாக வழிநடத்துதல், பொய், உண்மையல்ல ஆகிய வார்த்தைகளும் இனிமேல் தடை செய்யப்படுகின்றன.
முட்டாள்தனம், பாலியல் தொல்லை, குண்டர்கள், லாலிபாப், பாப்கட் ஆகிய வார்த்தைகளும் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இவற்றை பயன்படுத்தினால் சபை தலைவர்கள், சபை குறிப்பில் இருந்து நீக்கிவிடுவார்கள்.
பிரியங்கா
இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “அரசாங்கம் ஊழலில் ஈடுபடும் போது, அதை பிறர் ஊழல் என்று கூறுவதை அவர்கள் விரும்புவதில்லை. 2 கோடி வேலை வாய்ப்புகள் , விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல் போன்ற வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். அதற்கு மட்டும் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.
இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா வெளியிட்டுள்ள டுவீட் ஒன்றில் , ” பயன்படுத்த கூடாத வார்த்தைகளின் பட்டியலில் “சங்கி” என்ற வார்த்தை இல்லை . பாஜக எவ்வாறு இந்தியாவை அழிக்கிறது என்பதை விவரிக்க எதிர்க்கட்சிகள் பயன்படுத்தும் வார்த்தைகள் அனைத்தையும் அரசு தடை செய்துள்ளது” என பதிவிட்டுள்ளார்.
திரிணாமுல் காங். எம்.பி.
இந்த நிலையில், இந்த வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்துவேன். என்னை சஸ்பெண்ட் செய்து கொள்ளுங்கள் என திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. டெரிக் ஓ பிரைன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்குகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேச விடாமல் தடுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இப்போது, நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, வெட்கப்பட்டேன். துஷ்பிரயோகம் செய்யப்பட்டது. காட்டிக்கொடுத்தார்.
போலித்தனம். திறமையற்றவர் போன்ற வார்த்தைகள் இனிமேல் தடை செய்யப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்துவேன். முடிந்தால் என்னை சஸ்பெண்ட் செய்துகொள்ளுங்கள். ஜனநாயகத்திற்காக போராடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.