June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

மனைவி கொலை வழக்கில் கணவனுக்கு ஆயுள் தண்டனை-தென்காசி கோர்ட்டில் தீர்ப்பு

1 min read

Life sentence for husband in wife murder case-Judgment in Tenkasi Court

15.7.2022
செங்கோட்டை அருகே மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி அனுராதா தீர்ப்பு கூறினார்.

கொலை

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள தேன்பொத்தை பால்பண்ணை தெருவில் வசித்தவர் முருகன் மனைவி வெள்ளத்தாய் (வயது 40). இவருக்கு ஏற்கனவே 3 திருமணங்கள் நடைபெற்று வாழ்க்கை சரியாக அமையாததால் தனது தாயார் வீட்டில் வசித்து வந்தார்.
அப்போது அவருக்கும் சிவகிரி பசும்பொன் தேவர் தெருவைச் சேர்ந்த கோவிந்த தேவர் மகன் முருகன் (54) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முருகன் ஏற்கனவே திருமணம் ஆனவர். அதனை மறைத்து வெள்ளத்தாயை திருமணம் செய்து கொண்டார். இதன் பின்னர் முருகன் தேன்பொத்தையில் வசித்துள்ளார்.
முருகனுக்கு குடிப்பழக்கம் உண்டு. அவர் தனது மனைவியிடம் குடிக்க பணம் கேட்டு அடித்து உதைப்பது வழக்கமாம். கடந்த 2.12.2016 அன்று முருகன் குடிக்க பணம் வேண்டும் என வெள்ளத்தாயிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் இல்லை என்று கூறவே, வீட்டின் பத்திரத்தை எடுத்து தா அதனை அடமானம் வைத்து பணம் வாங்கி வருகிறேன் என கூறியுள்ளார்.
அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முருகன் மின்வயரால் வெள்ளத்தாயின் கழுத்தை நெரித்து அவரை கொலை செய்து விட்டு வீட்டின் கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு தப்பியோடிவிட்டார்.

ஆயுள் தண்டனை

இதுகுறித்து செங்கோட்டை போலீசில் வெள்ளத்தாயின் அக்கா சண்முகத்தாய் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தென்காசி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதி அனுராதா வழக்கை விசாரணை நடத்தி முருகனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்தத் தவறினால் 6 மாதம் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் வேலுச்சாமி ஆஜரானார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.