விமானத்தில் மயக்கமடைந்த பயணிக்கு தமிழிசை முதலுதவி
1 min read
Tamilisai first aid for an unconscious passenger on an airplane
23.7.2022
நடுவானில் விமானத்தில் மயக்கமடைந்த பயணிக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் முதலுதவி செய்து சிகிச்சை அளித்தார்.
தமிழிசை சவுந்தரராஜன்
தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன், இன்று அதிகாலை 3 மணிக்கு டெல்லியிலிருந்து ஐதராபாத்துக்கு விமானத்தில் பயணம் செய்தார். அதே விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு, திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்ததால், விமான பணிப்பெண் அங்கிருந்த பயணிகளில் யாரேனும் மருத்துவர்கள் அல்லது செவிலியர்கள் இருந்தால், மயக்கமடைந்த பயணிக்கு முதலுதவி அளிக்குமாறு கேட்டுள்ளார். அப்போது உடனடியாக மருத்துவரான தமிழிசை அந்த பயணியிடம் சென்று ஸ்டெதஸ்கோப் வைத்து பார்த்து, தேவையான முதலுதவி சிகிச்சை அளித்தார். இதன்பின் சிறிது நேரத்தில் அந்த பயணி கண்விழித்ததால் சக பயணிகள் நிம்மதியடைந்தனர். பின்னர் அந்த பயணியின் அருகிலேயே அமர்ந்து உடல்நிலையை கண்காணித்தபடியே கவர்னர் தமிழிசை பயணம் செய்தார். விமானம் ஐதராபாத் இறங்கியதும் அந்த பயணி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பயணியின் நிலையை கண்டு உடனடியாக செயல்பட்ட விமான பணிப்பெண்ணை தமிழிசை பாராட்டினார். இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், ஒரு மருத்துவராக தனது கடமயை சரியான நேரத்தில் செய்ததற்காக தமிழிசை சவுந்தரராஜனுக்கு பல்வேறு தரப்பினர் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.