நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவி ஏற்றார்
1 min read
Dravupati Murmu took office as the 15th President of the country
25/7/2022
நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவி ஏற்றுக்கொண்டார்.
ஜனாதிபதி
ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட திரவுபதி முர்மு வெற்றிபெற்றார். இதன் மூலம் நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாட்டில் பழங்குடி இனத்தை சேர்ந்த முதல் ஜனாதிபதி மற்றும் 2-வது பெண் ஜனாதிபதி என்ற பெருமையை திரவுபதி முர்மு பெறுகிறார்.
இந்த நிலையில், பதவி ஏற்பு விழாவுக்கு முன்னதாக திரவுபதி முர்மு ஜனாதிபதி மாளிகைக்கு சென்றார். அங்கு திரவுபதி முர்முவை ராம்நாத் கோவிந்த் வரவேற்றார். புதிய ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள திரவுபதி முர்முவுக்கு ராம்நாத் கோவிந்த் மலர் கொத்து கொடுத்து வரவேற்றார். இதனை தொடர்ந்து, நாடாளுமன்ற மைய வளாகத்தில் நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவி ஏற்றார். சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி. ரமணா திரவுபதி முர்முவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதன் பின்னர் திரவுபதி முர்மு பேசியதாவது:-
ஏழையின் சாதனை
ஜனநாயகத்தின் சக்தி இதுதான். ஒரு ஏழை வீட்டில் பிறந்த பெண், இந்தியாவின் மூலைமுடுக்கான பகுதியில் பிறந்த ஒரு ஏழை வீட்டு குழந்தை, நாட்டின் அரசியலமைப்பின் மிக உயரிய பதவியை வகிக்க முடியும் என்பது நிரூபணம் ஆகி உள்ளது. ஜனாதிபதியாக நான் தேர்வானது என்னுடைய சொந்த சாதனை அல்ல, இந்த சாதனை நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏழையின் சாதனையாகவே பார்க்கப்படும். நான் ஒடிசா மாநிலத்தில் ஒரு சிறிய பழங்குடியின கிராமத்தில் பிறந்தவள். எனக்கு இந்நாட்டின் ஜனாதிபதியாகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஒரு வார்டு கவுன்சிலர் நிலையில் இருந்து இப்போது ஜனாதிபதியாகும் வாய்ப்பு கிடைத்தது. இதுதான் நம் நாட்டின் பெருமை. ஜனநாயகத்தின் தாயாக இந்தியா விளங்குகிறது.
இன்றிலிருந்து இன்னும் சில தினங்களில் நம் நாடு 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது இந்த சூழலில் புதிய ஜனாதிபதியாக நான் பொறுப்பேற்று இருப்பது மகிழ்ச்சி. நம் நாடு 50வது சுதந்திர தினம் கொண்டாடும் போது தான் நான் முதன் முதலாக அரசியல் பயணத்தை ஆரம்பித்தேன். இப்போது 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது இந்த புதிய பொறுப்பு எனக்கு கிடைத்துள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு பின்னர் பிறந்து, இந்நாட்டின் ஜனாதிபதியாகும் முதல் நபர் நான் தான். அடுத்த 25 ஆண்டுகள் நாம் நம்முடைய சுதந்திர போராட்ட வீரர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் செயல்பட வேண்டும். அது இருவழிகளில் செயல்படுத்தப்படும், ஒவ்வொருவருடைய முயற்சி மற்றும் ஒவ்வொருவருடைய கடமை எனக் கருதி நாம் உழைக்க வேண்டும். நாளைய தினம் கார்கில் போரில் வெற்றி பெற்றதன் நினைவு தினம். இந்நாளில் நம் நாட்டு ராணுவத்துக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் உரையாற்றினார்.