சென்னையில் சுப்ரீம் கோர்ட்டு கிளை அமைக்க மு.க.ஸ்டாலின் கோரிக்கை
1 min read
M. K. Stalin’s request to set up a Supreme Court branch in Chennai
6.8.2022
சென்னையில் சுப்ரீம் கோர்ட்டு கிளை அமைக்க மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
வெள்ளிவிழா
தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் வெள்ளி விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் கொண்டப்பட்டது . இந்த விழாவில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் . சுப்ரீம் கோர்ட்டு’ நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், ஐகோர்ட்டு நீதிபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், ஆணையம் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கி கெளரவித்தார். மேலும், மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்பு அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டது. தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் வெள்ளிவிழாவில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-
மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டமானது 1993-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டாலும், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையமானது 1997-ஆம் ஆண்டுதான் தொடங்கப்பட்டது. இதற்கான முறையான அறிவிப்பை தமிழகத்தினுடைய சட்டமன்றத்தில் 1997-ஆம் ஆண்டு ஏப்ரல் 16-ஆம் தேதி, விதி எண் 110-ஐ பயன்படுத்தி முதல் அமைச்சர் கலைஞர் அன்றைக்கு வெளியிட்டார்.. மாநிலத்தில் மனித உரிமை ஆணையம் அமைக்க வேண்டும் என்று 1993-ஆம் ஆண்டு முதல் கருத்துரு இருந்தாலும், அது அமைக்கப்படவில்லை என்பதை சுட்டிக் காட்டிய கலைஞர் அவர்கள்,ஒன்றிய அரசிடமிருந்து, இதுதொடர்பாக தொடர்ச்சியாக அறிவுறுத்தல் வந்தாலும், ஐந்து ஆண்டுகாலமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டினார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி தமிழகத்தில் 1996-ஆம் ஆண்டு அமைந்த பிறகுதான், மாநில மனித உரிமை ஆணையம் அமைப்பதற்கான அரசாணை 20.12.1996 அன்று பிறப்பிக்கப்பட்டது.அதன்படி ஆணையம் அமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் நயினார் சுந்தரம் அவர்களைத் தலைவராக நியமித்தது கழக அரசு.இதனைச் சட்டமன்றத்தில்முதல் அமைச்சரராக இருந்த கலைஞர் அவர்கள் அன்றைக்கு அறிவித்தார்கள். Also Read – அழகியமணவாள பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா அதன்படி உருவாக்கப்பட்ட மாநில மனித உரிமை ஆணையத்தின் வெள்ளிவிழாவைத்தான் இன்று நாம் இங்கே கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். மனித உரிமை காக்கும் கலைஞர் அவர்களை இந்த இடத்தில் நினைவுகூர்வது பொருத்தமானதாக இருக்கும். மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். மனிதனின் மாண்புகள் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருப்பவர்கள். தந்தை பெரியார் அவர்கள், முதன்முதலில் தான் உருவாக்கிய அமைப்புக்கு சுயமரியாதை இயக்கம் என்றுதான் பெயர் சூட்டினார். சுயமரியாதை என்பது ஒவ்வொரு மனிதருக்கும் உயிரினும் மேலானது.மனித உரிமைக்கு அடித்தளமானதும் சுயமரியாதைதான். சுயமரியாதை – தன்மானம் – மனிதநேயம் – மனித உரிமைகள் ஆகிய அனைத்தும் ஒரே பொருளைத் தரக்கூடிய வேறுவேறு சொற்கள்தான்.அதனால்தான் தனிமனிதனின் சுயமரியாதையாக இருந்தாலும் – ஓர் இனத்தின் தன்மானமாக இருந்தாலும் – மானுடக் கூட்டத்தின் உரிமைகளாக இருந்தாலும் அவை எந்தக் காலத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் பாதிக்கப்படக் கூடாது; பறிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம், கவனமாகவும் இருக்கிறோம். Also Read – பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு – பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு இவை எல்லாம் ஏதோ அரசியல் கட்சியின் கருத்துகள் மட்டுமல்ல, அரசியலமைப்புச் சட்டம் சொல்வதும் இதனைத்தான். அரசியலமைப்புச் சட்டத்தின் மிகமிக அடிப்படையான அம்சம் என்பதே மனித உரிமைகள்தான். * சமத்துவ உரிமை * பேச்சுரிமை * எழுத்துரிமை * எண்ணங்களை வெளியிடும் உரிமை * ஒன்றுகூடும் உரிமை * பணிகள் செய்யும் உரிமை * மத சுதந்திரம் * கல்வி உரிமை *சொத்துரிமை பாதிக்கப்பட்டால் அதற்காகத் தீர்வு காணும் உரிமை ஆகிய பல்வேறு உரிமைகளை அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. அதனைக் காக்கும் பொறுப்பும் கடமையும் அனைத்து அரசுகளுக்கும் உள்ளது. அந்தக் கடமையிலிருந்து நாங்கள் ஒருநாளும் தவறமாட்டோம் என்ற உறுதியை நான் இங்கே தருகிறேன்.எனது தலைமையிலான நமது அரசு, சட்டத்தின் அரசாக – நீதியின் அரசாக – சமூகநீதியின் அரசாக செயல்பட்டு வருவதை நீங்கள் அனைவரும் நன்றாக அறிவீர்கள். எனவேதான் நீதித்துறையினரின் கோரிக்கையை உடனுக்குடன் நிறைவேற்றிக் கொடுத்து வருகிறோம். Also Read – ஆழியாற்றில் பொதுமக்கள் இறங்க கூடாது தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சேமநல நிதியானது 7 லட்சம் ரூபாயில் இருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. நீதித்துறையின் உள்கட்டமைப்புத் தேவைகளுக்காக பல்வேறு நீதிமன்றங்கள் அமைக்கும் வகையில் சென்னையில் 4.24 ஏக்கர் நிலத்தை நீதித்துறைக்கு அரசு வழங்கி உள்ளது. 9 மாடி கட்டடம் கட்ட 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வரிசையில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தர நாங்கள் தயாராக இருக்கிறோம். நீதித்துறையின் நீடித்த சிறப்பான செயலாக்கத்துக்கு ஒத்துழைப்பு நல்கக்கூடிய வகையில் இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. மாநில மனித உரிமை ஆணையத்தின் இந்த வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு சில அறிவிப்புகளை நான் வெளியிட விரும்புகிறேன். ஆணையத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.இங்கு பேசிய உறுப்பினர் சொன்ன அந்தக் கோரிக்கையின்படி,ஆணையத்தின் விசாரணைக் குழுவில் காவல் துறையினரின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்று சொன்னார். இது குறித்தும் விரைவில் ஆய்வு செய்து முடிவு செய்யப்படும். அதேபோல் மனித உரிமைக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பவர்கள், விளிம்பு நிலை மக்களின் உரிமைக்காகப் போராடி வருபவர்களையும் இதில் எப்படி பயன்படுத்திக் கொள்வது என்பது குறித்து ஆராயப்படும். மாநில மனித உரிமை ஆணையத்தின் இணையதளம் தமிழில் உருவாக்கப்படும். மனித உரிமைத் தகவல்கள் அனைத்தும் அனைத்து மக்களையும் சென்றடைய தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படும். மனித உரிமைக் கொள்கை, கோட்பாடுகள் குறித்தும், அதனை எந்த வகையில் பின்பற்ற வேண்டும் என்பது குறித்தும் அனைத்து தரப்பினருக்கும் அறிவுறுத்த பயிற்சி முகாம்கள் ஏற்பாடு செய்யப்படும். எந்தவொரு தனிமனிதனின் உரிமையும் மீறப்படக் கூடாது. எத்தகைய சமூகமும் எதன் பொருட்டும் இழிவுபடுத்தப் படக் கூடாது.இதற்குக் காரணமான யாரும் சட்டத்தின் பார்வையில் இருந்து தப்பிவிடக்கூடாது. இவை மூன்றும் தான் இந்த அரசினுடைய மனித உரிமைக் கொள்கை என்பதை இந்நிகழ்ச்சியின் வாயிலாக நான் அறிவிக்ககடமைப்பட்டிருக்கிறேன். உச்சநீதிமன்ற ,உயர்நீதிமன்ற நீதியரசர்கள் பங்கேற்கக்கூடிய இந்த நிகழ்ச்சியில் எனது சில கோரிக்கைகளை முன்வைக்கவும் நான் விரும்புகிறேன். பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றத்தின் கிளை, சென்னையில் அமைய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ் மொழி ஆக்கப்பட வேண்டும்.இவை சட்டத்தின் ஆட்சியில் மக்களின் கோரிக்கைகளாக இவை அமைந்துள்ளன. இக்கோரிக்கைகளை சில மாதங்கள் முன்பு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் நான் முன்வைத்தவைதான். இருப்பினும் மீண்டும் அவற்றை இங்கு வலியுறுத்த, நினைவூட்ட நான் விரும்புகிறேன். இங்கு வந்து கௌரவித்துள்ள மாண்பமை நீதிபதிகள் அவற்றை தமிழ்நாட்டிற்கு நிறைவேற்றித்தரவும் உங்கள் அனைவரின் சார்பில் நான் அவர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நீதித்துறையைப் பொறுத்தவரை நான் இங்கே கோரிக்கை வைப்பவனாகத்தான் வந்திருக்கிறேன் என்பதை நீதியரசர்கள் அறிவார்கள் என்று நான் நம்புகிறேன்.சட்டத்தின் அரசாக – நீதியின் அரசாக – அதுவும் சமூகநீதியின் அரசாக அமைவதுதான் மக்களின் அரசாக அமைய முடியும். எல்லோர்க்கும் எல்லாம் என்ற சமூகநீதித் தத்துவத்தை உள்ளடக்கிய திராவிட மாடல் அரசை நாங்கள் நடத்தி வருகிறோம். மக்களுக்கு இன்றைய தேவை என்ன என்பது மட்டுமல்ல, முக்கியமாக நீதி மட்டும்தான் என்பதை நாங்கள் அறிவோம். உலகப் பொருளாதார மேதையான அமர்த்தியா சென் அவர்கள் கூறுகிறார். அவர் The idea of justice என்ற புத்தகத்தில்,நீதியை உருவாக்கிக் கொடுப்பதும் – அநீதி எற்படாமல் தடுப்பதும் – ஆகிய இரண்டும் முக்கியமானது என்கிறார். அத்தகைய சூழ்நிலையை உருவாக்கவே நாங்கள் செயலாற்றி வருகிறோம். இதைத்தான் அய்யன் வள்ளுவர் தனது குறளில் “வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூம் கோடா தெனின்” – என்று கூறினார். இதன் பொருள், ஆட்சியாளருக்கு வெற்றி தருவது ஆயுதம் அன்று; அவரின் நெறி தவறாத ஆட்சி முறையே என்பதாகும். குறள் வழி நடக்கும் அறவழி ஆட்சியால், தமிழ் மக்களின் நலனையே முன்வைத்து செல்கிறோம். அவர்களின் உரிமைகளை பாதுகாக்க தொடர்ந்து விழைகிறோம். அந்த வகையில், மாநில மனித உரிமை ஆணையமானது இத்தகைய சமூகநீதி சமூகத்தை உருவாக்க அனைத்து வகையிலும் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஆணையத்தின் தலைவர், உறுப்பினர்கள், அதிகாரிகள், அலுவலர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து என் உரையை நிறைவு செய்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்