பீகார் முதல் மந்திரி பதவியில் இருந்து நிதிஷ் குமார் திடீர் ராஜினாமா
1 min read
Nitish Kumar suddenly resigned from the post of Bihar Chief Minister
9.8.2022
பீகார் முதல் மந்திரி பதவியில் இருந்து நிதிஷ் குமார் திடீரென்று ராஜினாமா செய்தார். அவர் லல்லு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தள ஆதரவுடன் மீண்டும் முதல்வராகிறார்.
நிதிஷ்குமார்
பீகாரில் ஐக்கிய ஜனதாதளம், பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த நிதிஷ்குமார் முதல்வராக இருக்கிறார். இந்தநிலையில் ஐக்கிய ஜனதாதளம், பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, பீகார் முதல் மந்திரி பதவியில் இருந்து நிதிஷ் குமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இன்று மாலை மாலை 4 மணிக்கு அவர் கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து நிதிஷ் குமார் மீண்டும் முதல் மந்திரியாக பதவியேற்பார் என்று தெரிகிறது.
பிளவுபட்டது எப்படி?
பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. 243 தொகுதிகளை கொண்ட பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்துக்கு 45 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பா.ஜனதாவுக்கு 77 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பா.ஜனதா அதிக இடங்களில் வென்றாலும் தேர்தலுக்கு முந்தைய ஒப்பந்தப்படி நிதிஷ்குமார் முதல்-மந்திரி ஆனார். பீகாரில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜனதா இடையிலான உறவு சமீபத்தில் சீராக இல்லை.
பீகார் மாநில பா.ஜனதா தலைவர்கள் அவ்வப்போது நிதிஷ் குமாரை விமர்சித்து வருகிறார்கள். “ஒன்றிய மந்திரிசபையில் ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு அதிக இடங்களை அளிக்க வேண்டும். 2024 பாராளுமன்ற தேர்தலுடன் பீகார் சட்டசபைக்கு ஒரு ஆண்டுக்கு முன்னதாகவே தேர்தல் நடத்த வேண்டும்” என்ற கோரிக்கைகளை நிதிஷ்குமார் வைத்திருந்தார்.
இதில் மத்திய மந்திரி சபையில் அதிக இடம் என்ற நிதிஷ்குமாரின் கோரிக்கையை பா.ஜனதா மறுத்துவிட்டது. இதையடுத்து பா.ஜனதா தலைமையிலான ஒன்றிய மந்திரி சபையில் இனி சேரப்போவது இல்லை என்று ஐக்கிய ஜனதா தளம் அறிவித்தது.
மேலும் ஐக்கிய ஜனதா தளத்தில் பிளவை ஏற்படுத்த பா.ஜனதா முயற்சி செய்வதாகவும், அதற்காக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் தேசிய தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஆர்.சி.பி. சிங்கை பா.ஜனதா வளைக்க முயற்சிப்பதாகவும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் சந்தேகித்தனர்.
இந்த நிலையில் பாராளுமன்ற மேல்சபையில் எம்.பி.யாக இருந்த சி.பி. சிங்கின் பதவிக்காலம் முடிந்தது. ஆனால் அவருக்கு நிதிஷ்குமார் மீண்டும் வாய்ப்பு வழங்கவில்லை. மேலும் அவருக்கு கட்சி சார்பில் நோட்டீசும் அனுப்பப்பட்டது. இதனால் ஆர்.சி.பி.சிங் சில நாட்களுக்கு முன்பு ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து விலகினார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒன்றிய அரசு அழைத்த 4 கூட்டங்களில் நிதிஷ்குமார் பங்கேற்கவில்லை. ஜனாதிபதியாக இருந்த ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழா, புதிய ஜனாதிபதி திரவுபதி முர்முவின் பதவி ஏற்பு விழா, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டம் உள்ளிட்ட 4 கூட்டங்களை நிதிஷ்குமார் புறக்கணித்தார். இதனால் அவர் பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகி செல்வதாக கூறப்பட்டது.
இடையே விரிசல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் இரு கட்சியினரும் பாட்னாவில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி விரிவான ஆலோசனை நடத்தினார்கள். அப்போது அடுத்த 48 மணி நேரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என்ற வகையில் அவர்கள் பேசியதாக கூறப்படுகிறது.
மீண்டும் முதல்வர் ஆகிறார்
இந்த நிலையில் நிதிஷ்குமார் ராஜினாமா செய்துள்ளார். அவர் மீண்டும் முதல்வர் ஆகிறார் என்ற தகவல் பரபரப்பாக பேசப்படுகிறது. பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 45, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி 79, காங்கிரஸ் 19, இடதுசாரிகள் 12 எம்.எல்.ஏக்களை சேர்த்து புதிய கூட்டணிக்கு சுமார் 160 உறுப்பினர்கள் உள்ளனர். பீகாரில் மொத்தமுள்ள 243 எம்.எல்.ஏக்களின் சுமார் 160 பேரின் ஆதரவு ஐக்கிய ஜனதா தளம் ஆர்.ஜேடி கூட்டணிக்கு உள்ளது. அதன்மூலம் மீண்டும் நிதீஷ்குமார் ஆட்சி அமைப்பார் என்று கூறப்படுகிறது.