தமிழகத்தின் 5-வது யானைகள் காப்பகமாக அகஸ்தியர் மலை அறிவிப்பு
1 min read
Agasthiyar Hill announced as Tamil Nadu’s 5th Elephant Sanctuary
12.8.2022
நெல்லை மாவட்டம் அகஸ்தியர் மலையை யானைகள் காப்பகமாக அறிவித்து மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பூபேந்தர் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
அகஸ்தியர் மலை
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பொதிகை மலை பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது. இந்த மலையில் அமர்ந்து கொண்டுதான் அகஸ்தியர் தமிழ் வளர்த்ததாக வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.
இந்த மலையின் உச்சியின் அகஸ்தியர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு வாகனங்கள் செல்லமுடியாதபடி அடர் வனப்பகுதியாக காணப்படுகிறது. இதனால் பக்தர்கள் அகஸ்தியர் கோவிலுக்கு நடைபயணமாக செல்வார்கள். அதன்படி 2 நாட்கள் இரவு, 3 நாட்கள் பகல் என கடுமையான நடைபயணம் மூலம் நெல்லை மாவட்டம் பாபநாசம், காரையாறு அணை, பாணதீர்த்த அருவி, பேயாரு ஆகியவற்றை கடந்து பொதிகை மலைக்கு செல்வார்கள்.
கடந்த 1995-ம் ஆண்டு வரை பக்தர்கள் சென்று வந்த நிலையில் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய பாதுகாப்பை கருத்தில் கொண்டு 2002-ஆம் ஆண்டுக்கு பின் இவ்வழியாக செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் தற்போது பக்தர்கள் மலையின் மறுபுறம் உள்ள திருவனந்தபுரம் வழியாக சென்று வருகிறார்கள்.
யானைகள் காப்பகம்
பொதிகை மலையில் 6 ஆயிரம் சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. மேலும் பொதிகை மலையில் 121 வகை உயிரினங்கள், 157 வகை ஊர்வன விலங்குள் மற்றும் அறிய வகை தாவரங்களும் காணப்படுகிறது. இந்நிலையில் உலக யானைகள் தினத்தையொட்டி சிறப்பு பெற்ற அகஸ்தியர் மலையை யானைகள் காப்பகமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் 4 யானைகள் காப்பகம் உள்ள நிலையில் 5-வது காப்பகமாக அகஸ்தியர் மலையை அறிவித்து மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பூபேந்தர் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.