காஷ்மீரில் புலம்பெயர்ந்த தொழிலாளி சுட்டுக்கொலை
1 min read
Migrant worker shot dead in Kashmir
12.8.2022
காஷ்மீரில் புலம் பெயர்ந்த தொழிலாளி ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் உட்பட 4 பேர் வீர மரணம் அடைந்தனர். இந்நிலையில் நேற்றிரவு பந்திப்போரா மாவட்டத்தில் சும்பால் எனும் பகுதியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த 19 வயது இளைஞரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். வீட்டில் இருந்த முகமது அம்ரேஸ் என்ற அந்த நபரை, பயங்கரவாதிகள் வீட்டிற்குள் நுழைந்து சரமாரியாக சுட்டனர். பின்னர் அங்கிருந்து இருச்சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். காயமடைந்த நபர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினார்கள். இது குறித்து காஷ்மீர் போலீஸ் கூறுகையில், இன்று முன்தினம் இரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பீகாரை சேர்ந்த முகமது ஆம்ரேஸ் படுகொலை செய்யப்பட்டார் என்று டுவிட்டரில் தெரிவித்தனர். சமீபத்தில் காஷ்மீரில், வெளிமாநில தொழிலாளர்கள் சிலர் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில், மீண்டும் அத்தகையதொரு சம்பவம் அரங்கேறியுள்ளது காஷ்மீரில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.