பன்றியின் தோலில் இருந்து உருவாக்கப்பட்ட கருவிழியை
மனிதர்களுக்கு பொருத்தி சாதனை
1 min read

Iris made from pig skin is implanted in humans
13.8.2022
பன்றியின் தோலில் இருந்து உருவாக்கப்பட்ட கருவிழியை மனிதர்களுக்கு பொருத்தி ஆராய்ச்சியாளர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
கருவிழிப் படலம்
கருவிழிப் படலம் அல்லது விழி வெண்படலம் (கார்னியா) என்பது கண்ணில் ஒளி ஊடுருவக்கூடிய வட்டவடிவ முன்பகுதியாகும். இதில் ஏற்படும் பாதிப்பால் கண்பார்வை பறிபோகும் நிலை உள்ளது. இந்த நிலையில், பன்றியின் தோலில் இருந்து உருவாக்கப்பட்ட கருவிழியை மனிதர்களுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து பொருத்தி ஆராய்ச்சியாளர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
இதன் மூலம் பார்வை குறைபாடு பிரச்சனை உள்ளவர்கள் பார்வை திறன் பெற முடியும் என அவர்கள் கூறுகின்றனர். இந்தியா மற்றும் ஈரானைச் சேர்ந்த சிலர் பார்வை குறைபாடு அவதிப்பட்டு வந்த நிலையில் அவர்களுக்கு இந்த உறுப்பு மாற்று சிகிச்சை வெற்றிகரமாக செய்து பார்வை பெறச் செய்தனர் மருத்துவர் நிபுணர்கள். இதன் மூலம் கண் பார்வை இல்லாதவர்கள் கூட பார்வையை பெற முடியும் என கூறப்படுகிறது. பொதுவாக இறந்தவர்கள் உடலில் இருந்து கண் தானம் செய்த கண்களை பெற்று பார்வை இல்லாதவர்களுக்கு பொருத்துவது வழக்கம்.
இந்த நிலையில் ஆய்வகங்களில் செயற்கையான முறையில் கண் கருவிழியை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி அதனை மனிதர்களுக்கு பொருத்தி வெற்றியும் கண்டுள்ளனர். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினர்கள் உள்ளிட்ட சர்வதேச மருத்துவ நிபுணர்கள் இணைந்து இந்த புதிய சாதனையை செய்துகாட்டியுள்ளனர். ஆய்வகத்தில் செயற்கை முறையில் உருவாக்கப்படும் இந்த கருவிழி 2 வருடங்கள் வரை பத்திரமாக பாதுகாக்க முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர். இதன் மூலம் பார்வையில்லாத பலருக்கு பார்வை கிடைக்க வழி செய்யும். உலக அளவில் 1.2 கோடி(12 மில்லியன்) மக்கள் பார்வையற்றவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு தேவைப்படும் கண் மாற்று அறுவை சிகிச்சை இதன் மூலம் வெற்றிகரமாக நடைபெறும் என்று நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.
கருவிழி புரதத்தால் பெரும்பாலும் ஆனது. பன்றியின் தோலிலிருந்து புரதத்தை எடுத்து ஆய்வகத்தில் அதை பயன்படுத்தி செயற்கை முறையில் கருவிழியை உருவாக்கி உள்ளனர்.
2 ஆண்டுகள் வரை…
பொதுவாக கண் தானம் செய்பவர்களிடமிருந்து பெறப்படும் கருவிழி இரண்டு வார காலத்திற்குள் இன்னொருவருக்கு பொருத்தியாக வேண்டும். ஆனால் இந்த செயற்கை முறை கருவிழி இரண்டு ஆண்டுகள் வரை பாதுகாக்கபடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அதிநவீன லேசர் கண் அறுவை சிகிச்சை முறையில் மிக எளிதாக இந்த கருவிழி மாற்று சிகிச்சை மேற்கொள்ளலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஈரானைச் சேர்ந்த 12 பேர், இந்தியாவில் இருந்து எட்டு பேர் என மொத்தம் 20 பேருக்கு இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின் எட்டு வார காலம் நோயாளிகள் சற்று கவனத்துடன் கண் சொட்டு மருந்து விட்டு பாதுகாத்து வந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு கட்டுரை கடந்த வியாழக்கிழமை அன்று வெளியான இயற்கை உயரிதொழில்நுட்பம் என்ற அறிவியல் இதழில் வெளியாகி உள்ளது. விரைவில் இந்த செயல்முறை பல்வேறு நாடுகளுக்கும் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.