ஓ.பன்னீர் செல்வம் அழைப்புக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி
1 min read
Edappadi Palaniswami responds to O. Panneer Selvam’s call
18.8.2022
ஓ.பன்னீ்ர் செல்வம் அழைப்புக்கு எடப்பாடி மாறுப்பு தெரிவித்து பதில் அளித்தார்.
அ.தி.மு.க. பொதுக்குழு
கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், பொதுக்குழு செல்லாது என்றும் ஜூன் 23 ஆம் தேதி இருந்த நிலையே தொடர வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, இரு தரப்பும் இணைந்து செயல்பட வேண்டும் எனும் முயற்சியில் ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் இறங்கியுள்ளார்.
சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள வீட்டில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அழைப்பு
அப்போது, கழகம் ஒன்றுபட்டு தேர்தலை சந்தித்தபோது தமிழகத்தில் எந்த சக்தியும் அதிமுகவை வெல்ல முடியாத நிலை இருந்தது. எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. அவற்றை மனதில் இருந்து அப்புறப்படுத்தி கட்சி ஒன்றுபட வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும், நான்கரை ஆண்டு காலம் அன்புச் சகோதரர் எடப்பாடியுடன் பயணித்தோம். மீண்டும் அந்த நிலை வரவேண்டும் என்பதே எங்கள் தலையாய கோரிக்கை. எங்களது எண்ணம், செயல் எல்லாமே, இணைப்பு இணைப்பு இணைப்புதான். தனிப்பட்ட விருப்பு வெறுப்பு எதுவும் எங்களுக்கு இல்லை. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். அவை தொலையட்டும். எங்கள் தரப்புக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் பரவாயில்லை. கட்சி ஒற்றுமையே முக்கியம். இனி நடப்பவை நல்லதாக இருக்கட்டும்.” எனத் தெரிவித்திருந்தார்.
இதன் மூலம் நேரடியாகவே எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
எடப்பாடி மறுப்பு
இந்நிலையில், இதற்கு பதில் அளிக்கும் வகையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, ஒற்றைத் தலைமை என்பது தொண்டர்களின் விருப்பம். அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் அடிப்படை தொண்டர்களின் பிரதிநிதிகள். தொண்டர்கள் விருப்பத்தை பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலித்தனர். அதிமுக விதிகளை மாற்றவோ, பதவிகளுக்கு ஒப்புதல் தரவோ பொதுக்குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றார்.
மேலும் பேசிய எடப்பாடி பழனிசாமி, தொண்டர்கள் பலம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இருந்தால். தனது செல்வாக்கை பொதுக்குழுவில் நிரூபிக்கலாமே. பொதுக்குழுவுக்கு வந்து ஓபிஎஸ் தனது கருத்தை தெரிவிக்க வேண்டும். பொதுக்குழுவுக்கு வாருங்கள் என ஓ.பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பொதுக்குழுவில் தனக்கு பலம் அதிகம் இருப்பதைத் தொடர்ந்தே, உயர் நீதிமன்ற உத்தரவின் ஒரு முக்கியமான பாயிண்டை பயன்படுத்தி, ஓபிஎஸ்ஸை பொதுக்குழுவுக்கு அழைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இரு தலைவர்களும் இணைந்து சட்டப்பூர்வமான முறையில் பொதுக்குழுவை நடத்தி முடிவெடுக்கலாம் என்பதே நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம். அதையொட்டியே, ஓபிஎஸ்ஸின் சமாதான நடவடிக்கையை நிராகரித்து பலத்தை நிரூபிக்குமாறு கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.