காங்கிரஸ் கட்சியில் இருந்து குலாம் நபி ஆசாத் விலகல்-பரபரப்பு குற்றச்சாட்டு
1 min readGhulam Nabi Azad’s resignation from the Congress party-propaganda allegation
26.8.2022
காங்கிரஸ் கட்சியில் இருந்து குலாம் நபி ஆசாத் விலகினார். அவர் ராகுல் காந்தி முதிர்ச்சியற்றவராக இருப்பதாக குற்றம் சாட்டினார்.
குலாம்நபி ஆசாத்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக குலாம் நபி ஆசாத் அறிவித்து இருப்பது காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸின் தலைமை மாற்றம் தொடர்பாக நீண்ட காலமாகவே குலாம் நபி ஆசாத் அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதை பலமுறை வெளிப்படையாகவும் அறிவித்துள்ளார்.
தலைமை மாற்றம் கோரி சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 தலைவர்கள் குழுவிலும் குலாம் நபி ஆசாத் இடம் பெற்றிருந்தார்.
முன்னதாக கடந்த வாரம் ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸின் தலைவராக நியமிக்கப்பட்ட சில மணிநேரங்களில், இவர் தனது பதவியை ராஜினாமா செய்தது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் இப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்தே விலகிவிட்டார். அவர் அக்கட்சியின் மீதும் ராகுல் காந்தி மீதும் சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவர் கூயிருப்பதாவது:-
குழந்தை தனமான நடவடிக்கை
ராகுல் காந்தி கட்சியில் இணைந்தபோது தான் கட்சியில் அனைத்து விஷயங்களும் மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக கலந்து ஆலோசனை செய்யப்பவது முற்றிலும் அழிக்கப்பட்டு உள்ளது. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு ராகுல் காந்தியில் குழந்தைத்தனமான நடவடிக்கையே காரணம் என்றும், ராகுல்காந்தியின் நடவடிக்கைகள், அரசியலில் அவருடையை முதிர்ச்சியின்மையை காட்டுகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் சோனியாகாந்தி பெயரளவிலேயே தலைவராக இருக்கிறார். ஆனால் கட்சியின் முக்கிய முடிவுகளான மாநில தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம், சட்டமன்ற உறுப்பினர்கள் அறிவிப்பு உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் ராகுல் காந்தி மற்றும் ராகுல் காந்தியை சார்ந்தோரால் மட்டுமே எடுக்கப்படுகிறது.
ரிமோட் கண்ட்ரோல்
காங்கிரஸ் கட்சியிலும் ரிமோட் கண்ட்ரோல் முறை வந்துவிட்டது. கட்சியில் தான் அரை நூற்றாண்டு காலமாக இருந்தும், கட்சியின் மூத்த தலைவர்களை மதிப்பதில்லை, அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
குலாம் நபி ஆசாத்தின் இந்த குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.