எடப்பாடி பழனிசாமி கூட்டிய அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும்- சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு
1 min read
ADMK convened by Edappadi Palaniswami. General Assembly will go – Madras High Court verdict
2.9.1011
எடப்பாடி பழனிசாமி கூட்டிய அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
அ.தி.மு.க. பொதுக்குழு
எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூட்டிய பொதுக்குழுவைச் செல்லாது என அறிவிக்கக் கோரி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், அ.தி.மு.க.வில் ஜூன் 23- ஆம் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் எனத் தனி நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.இந்த மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை கடந்த ஆகஸ்டு 25 ஆம் தேதி முடிவடைந்தது. இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் எழுத்துப்பூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்ய இருதரப்புக்கும் உத்தரவிட்டு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்திருந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்த எடப்பாடி பழனிச்சாமியின் மேல் முறையீட்டு மீதான விசாரணை, இரு நீதிபதி அமர்வுக்கு முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை நிறைவடைந்து இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்ராமன் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பில், கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என தனிநீதிபதி ஹெயச்சந்திரன் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து, எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 11ம் தேதி நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது வெளியாகியுள்ள தீர்ப்பின் படி அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தொடருவார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
எடப்பாடி பழனிசாமி தரப்புக்குச் சாதகமான தீர்ப்பு வந்ததைத் தொடர்ந்து எடப்பாடி தரப்பினர் இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். அதே சமயம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள ஆலோசித்து வருவதாகச் சொல்லப்படுகிறது.