திருவேற்காடு அருகே கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி நிலம் மீட்பு
1 min read
Recovery of Rs 2 crore land belonging to Karivaradharaja Perumal Temple near Tiruvekadu
10/9/2022
திருவேற்காடு அருகே கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
கோவில் நிலம்
தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான சொத்துகள் மீட்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கத்தில் உள்ள பழமையான கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமித்து கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.
இது குறித்து தகவல் அறிந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், திருவேற்காடு நகராட்சி பணியாளர்கள் மற்றும் வருவாய்த்துறையினர் நேற்று முன்தினம் அந்த ஆக்கிரமிப்பை அகற்றி கோவில் நிலத்தை மீட்டனர். அந்த நிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டது. அங்கு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக குடிசைகள், கட்டுமானப்பொருட்களும் அகற்றப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.2 கோடி ஆகும். அந்த இடத்தில், கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது. இதையொட்டி திருவேற்காடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
==
பாரதியார் நினைவு நாள் மகாகவி நாளாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை,செப்.11-
பாரதியார் நினைவு நாளான செப்டம்பர் 11-ம் தேதி இனி மகாகவி நாளாக கடைப்பிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மகாகவி பாரதியார் தமிழ்ப்பற்று, தெய்வப்பற்று, தேசப்பற்று, மானுடப்பற்று ஆகிய நான்கும் கலந்தவர். இந்திய நாட்டின் விடுதலைக்காக போராடியது மட்டும் அல்லாமல். சமூக, பொருளாதார உரிமைகளுக்காக எழுதிய, தனது கவிதை வரிகளால் மக்கள் மனதில் என்றும் நிலைத்துள்ளார். மகாகவி பாரதியார் மறைந்து நூறு ஆண்டுகள் ஆகியும், தமிழ் சமுதாயத்திற்காக அவர் விட்டுச் சென்ற கவிதைகள், கட்டுரைகள், பாடல்கள் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் உயிரோட்டமாக இருக்கும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பாரதியாரின் நினைவைப் போற்றுகின்ற வகையில், அவர் மறைந்த நூற்றாண்டின் நினைவாக 14 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அவற்றில், பாரதியின் நினைவு நாளான செப்டம்பர் -11 (நாளை), “மகாகவி நாள்”-ஆக கடைப்பிடிக்கப்படும் என்பதும் ஒன்றாகும். எனவே, சிறப்பு வாய்ந்த மகாகவி நாளான நாளை காலை 9.30 மணிக்கு காமராஜர் சாலை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பாரதியார் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து, மகாகவி பாரதியாரின் உருப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.