அதிமுக அலுவலக வழக்கு: ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
1 min read
AIADMK office case: O. Panneerselvam’s appeal to be heard in Supreme Court tomorrow
11.9.2022
அதிமுக அலுவலகம் தொடர்பான வழக்கில்
ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணைக்கு வருகிறது.
அ.தி.மு.க. அலுவலக வழக்கு
அ.தி.மு.க.வில் இரட்டை தலைமைக்கு முடிவு கட்டிவிட்டு முன்புபோல் ஒற்றை தலைமை வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் கோரினார்கள். ஆனால் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் ஏற்கனவே இருப்பது போல் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தொடர வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.
இந்த நிலையில் ஜூலை 11ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் இதுதொடர்பான தீர்மானம் கொண்டு வர எடப்பாடி பழனிசாமி தரப்பினர் முடிவு செய்தனர். இதனால் அ.தி.மு.க. அலுவலத்தில் இருதரப்பினரும் மோதிக்கொண்டனர் அந்த மோதல் கலவரமாக மாறியது. இதில் பலர் காயம் அடைந்த நிலையில் அ.தி.மு.க. அலுவலகமும் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டன. அங்கிருந்த பொருட்களும் கொள்ளை போனது. இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருமே சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 20-ந் தேதி நடைபெற்றது. நீதிபதி சதீஷ்குமார் விசாரணை நடத்தி அளித்த தீர்ப்பில் அ.தி.மு.க. அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
இதன்படி அ.தி.மு.க. அலுவலகம் தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பிடமே உள்ளது. இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த மாதம் 4-ந்தேதி இது தொடர்பான மனுவை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வக்கீல்கள் தாக்கல் செய்தனர். எடப்பாடி பழனிசாமி தரப்பு கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த மாதம் 18-ந்தேதி நடைபெற்றது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், எடப்பாடி பழனிசாமியிடம் அ.தி.மு.க. அலுவலக சாவியை ஒப்படைத்தது தவறு என்று வாதிடப்பட்டது. ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை விதிக்கவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு சாவி விவகாரத்தில் எந்த தடையையும் விதிக்க மறுத்து விட்டது. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் வருவாய் துறையினர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் 3 வார இடைவெளிக்கு பிறகு அ.தி.மு.க. அலுவலக சாவி தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் நாளை (12-ந்தேதி) நடைபெறுகிறது. இன்றைய தினம் அ.தி.மு.க. அலுவலக சாவி தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட உள்ளது.
எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பைச் சேர்ந்த வக்கீல்கள் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைக்கிறார்கள். இதனால் அதிமுக தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.