குலசை தசரா விழாவில் சினிமா பாடல்களை ஆடி, பாட ஐகோர்ட்டு தடை
1 min read
high Court bans singing and singing of movie songs during Kulasai Dussehra festival
14/9/2022
குலசை தசரா விழாவின் போது பக்திப் பாடல்கள் அல்லாத பாடல்கள் பாடவும், ஒலிப்பரப்பி ஆடவும் இடைக்கால தடை விதித்து ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தசரா விழா
தசரா திருவிழா மைசூருக்கு அடுத்தப்படியாக வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா 2 ஆண்டுகளுக்கு பின்னர் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு இந்த ஆண்டு நடைபெற இருக்கிறது.
வருகிற 26-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் திருவிழாவில் தினமும் பல்வேறு பூஜைகள் நடக்கிறது. சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் சிதம்பரேஸ்வரர் கடற்கரையில் அக்டோபர் 5-ந்தேதி நள்ளிரவு நடக்கிறது.
சீரமைப்பு பணி திருவிழாவில் கலந்து கொள்ள வரும் பக்தர்கள் வாகனங்களால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே ஆங்காங்கே வாகனத்தை நிறுத்தாமல் அதற்கென இடங்களை தேர்வு செய்து அதில் நிறுத்தி வைக்கும் வகையில் கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
அலங்காரப்பொருட்கள்
மேலும், தசரா திருவிழாவையொட்டி பக்தர்கள் வேஷம் போடும் பக்தர்களுக்கு கிரீடம், கண்மலர், நெத்தி பட்டை, வீரப்பல், இடுப்பு ஒட்டியானம், கைப்பட்டை, சூலாயுதம் போன்றவை எடுத்து வருவார்கள். வேடம் அணியும் பக்தர்களுக்கான அலங்கார பொருட்கள் தயாரிப்பு பணியில் உடன்குடி மற்றும் சுற்றுப்புற பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சில பக்தர்கள் தங்களது தலை சுற்றளவை கொடுத்து கீரிடமும், சிலர் இடுப்பு அளவு கொடுத்து ஒட்டியானமும் தயாரிக்கிறார்கள். இதற்கான பணிகள் இப்போதே நடந்து வருகிறது. இதேபோல் மற்ற அலங்கார பொருட்கள் தயாரிப்பு பணியும் நடைபெறுகிறது.
சினிமா பாட்டுக்கு தடை
இந்நிலையில், குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவில் பக்திப் பாடல்கள் அல்லாத பாடல்கள் பாடவும், ஒலிப்பரப்பி ஆடவும் இடைக்கால தடை விதித்து ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக ஐகோர்ட்டு மதுரை கிளை அளித்த உத்தரவில், குலசை தசரா விழாவின் போது பக்திப் பாடல்கள் அல்லாத பாடல்கள் பாடவும், ஒலிப்பரப்பி ஆடவும் இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. மேலும், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருவிழாவிற்கு நேரில் சென்று பக்திப் பாடல்கள் அல்லாத பாடல்கள் பாடவும், ஒலிப்பரப்பி ஆடவும் விதிக்கப்பட்ட தடை கடைபிடிக்கப்படுகிறதா என கண்கானிக்க வேண்டும். மேலும்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்காணிப்பதை மாவட்ட கலெக்டர் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.