ராகுல் காந்தி தலைவராக வரவேண்டும் என தமிழக காங்கிரஸ் தீர்மானம்
1 min read
Tamil Nadu Congress has decided that Rahul Gandhi should become the President
19.9.2022
தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் ராகுல் காந்தி தலைவராக வரவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சியில் மாநில அளவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுக்குழு கூட்டங்கள் நடத்துவது வழக்கம். கடைசியாக 2017-ல் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. மாநிலத்தலைவர்கள் தேர்தல் வரும் அக்டோபரில் நடக்க உள்ளது.
இதற்கிடையே, இந்திய தேசிய காங்கிரசின் தேர்தல் பிரிவுத் தலைவர் மதுசூதன் மிஸ்திரி, மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் 9,100 பேரின் பட்டியலை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டார். மேலும், வரும் 20-ம் தேதிக்குள் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தி, மாநிலத்தலைவர்கள், தேசியப் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகியோரை நியமிப்பது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி அனுப்புமாறு, அனைத்துமாநிலத் தலைவர்களுக்கும் அவர் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 11.30 மணிக்கு சென்னை வேப்பேரியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ வளாகத்தில் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்றது. அதில் 690 காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டதாக கூறப்படுகின்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி வரவேண்டும் என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.