முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா காலமானார்
1 min read
Former Speaker Sedapatti Muthiah passed away
21.9.2022
உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா இன்று (புதன்கிழமை) மதியம் 1 மணியளவி்ல காலமானார். அவருக்கு வயது 77.
சேடப்பட்டி முத்தையா
மதுரை மாவட்டம் சேடபட்டியை சேர்ந்தவர் சேடப்பட்டி ரா.முத்தையா. இவர் 1945-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி பிறந்தவர். தனது கடைசி காலத்தில் திமுகவில் இருந்து வந்தார். இவரது மகன் மணிமாறன், மதுரை புறநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக உள்ளார்.
சேடப்பட்டி ரா.முத்தையா கடந்த 1991 முதல் 1996 வரை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தமிழக சட்டப்பேரவைத் தலைவராக இருந்தவர். 2000 வரை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாகவும், அவருக்கு மிக நெருக்கமாக இருந்தவர். அதனால், ஜெயலலிதா அதிமுக பொருளாராக சேடப்பட்டி ரா.முத்தையாவை நியமித்து அழகுப் பார்த்தார்.
அதன்பிறகு ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட மனகசப்பு காரணமாக சிறிது காலம் தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்து வந்தார். பின், சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த சேடப்பட்டி முத்தையா, திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து திமுகவில் இணைந்தார்.
4 முறை
சேடப்பட்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து நான்கு முறை தமிழகச் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதனாலேயே இவரை அதிமுகவினரும், பொதுமக்களும் “சேடப்பட்டியார்” என்று அழைத்து வந்தனர். அதிமுக சார்பில் மக்களவைக்கு பெரியகுளம் தொகுதியிலிருந்து இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் எம்.பியாக இருந்தவர். 1998-ஆம் ஆண்டு அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சராக பணியாற்றியுள்ளார்.
காலமானார்
கடந்த 8-ம் தேதி மதுரை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் சிகிச்சைப் பெற்று வந்த சேடப்பட்டி ரா.முத்தையாவை சந்தித்து நலம் விசாரித்தார். மருத்துவர்களிடம் அவருக்கு அளித்த சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தார்.
இந்நிலையில், இன்று (புதன்கிழமை) மதியம் 1 மணியளவில் சிகிச்சை பலனளிக்காமல் சேடப்பட்டி ரா.முத்தையா காலமானார்.