தமிழகத்தில் 5,583 பள்ளி கட்டிடங்கள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது
1 min read
5,583 school buildings in Tamil Nadu are damaged and unusable
22.9.2022
தமிழகத்தில் 5,583 பள்ளி கட்டிடங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது என்று ஐகோர்ட்டு மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பள்ளிக்கட்டிடம்
மதுரையை சேர்ந்த சமூகநல ஆர்வலர் செந்தில் முருகன் என்பவர் ஐகோர்ட்டு மதுரைக் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தமிழகத்தில் மோசமான நிலையில் உள்ள பழைய பள்ளி கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடம் கட்ட தமிழக அரசு குழு அமைக்க வேண்டும் என்று கோரி இருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணா பிரசாத் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
பயன்படுத்த முடியாதவை
அதில், 2021-2022 ஆண்டு தமிழகத்தில் 2,553 சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டுள்ளது. 2022-2023 ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு 3030 சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் அகற்றப்பட உள்ளது. மேலும், தமிழகத்தில் 5,583 பள்ளி கட்டிடங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவுசெய்து கொண்ட நீதிபதிகள், தமிழகத்தில் மோசமான நிலையில் உள்ள பழைய பள்ளி கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடம் கட்ட குழு அமைக்க கோரிய வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.