ஓட்டுனர்கள் இன்றி இயங்கும் மெட்ரோ ரெயில்கள் வடிவமைப்பு
1 min read
Design of driverless metro trains
22/9/2022
ஓட்டுனர்கள் இன்றி மெட்ரோ ரெயில்கள் தானாக இயங்கும் வகையில் ரெயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
மெட்ரோ ரயில்
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும் வெளி ஊரில் இருந்து வரும் பயணிகளுக்கும் மெட்ரோ ரயிலில் பயணிக்கும்போது ஒரு நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. சென்னையில் 2 வழித்தடங்களில் 55 கி.மீ. தூரத்துக்கு தினமும் காலை 5 மணியிலிருந்து இரவு 11 மணி வரை 42 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 15 பெண்கள் உள்பட 180 டிரைவர்கள் பணியாற்றிவருகின்றனர்.
இதைத் தொடர்ந்து 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கான திட்டப்பணிகள் அனைத்தும் வருகின்ற 2026 ஆம் ஆண்டிற்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஓட்டுனர் இல்லாமல்…
இந்நிலையில் சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாவது கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் புதிதாக அமையவுள்ள மூன்று வழித்தடங்களிலும் ஓட்டுனர்கள் இல்லாமல் மெட்ரோ ரெயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் ஓட்டுனர் அல்லாது தானியங்கி முறையில் ரெயிலை இயக்கும் வகையில் ரெயில் பெட்டிகளை தயாரிப்பு செய்ய மெட்ரோ ரெயில் நிர்வாகம் ஒப்பந்தம் வழங்கியுள்ளது.