7 பேரை திருமணம் செய்தது ஏன்- கைதான சந்தியா உருக்கமான தகவல்
1 min read
Why married 7 people- Kaidana Sandhya hot information
26.9.3033
7 பேரை திருமணம் செய்த சந்தியா அதற்கான காரணத்தை உருக்கமான கூறினார்.
திருமணம்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வெங்கரை அருகே உள்ள கள்ளிபாளையத்தை சேர்ந்தவர் தனபால் (வயது 35). இவருக்கும், மதுரையை சேர்ந்த சந்தியா (26) என்பவருக்கும் அதே ஊரை சேர்ந்த புரோக்கர் பாலமுருகன் மூலம் திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து 2 நாட்கள் கழித்து புதுமாப்பிள்ளை தனபால் காலை எழுந்து பார்த்தபோது மனைவி மாயமானதும், அவர் வீட்டில் இருந்த நகை, துணிமணிகள் ஆகியவற்றை திருடி சென்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து தனபால் வேலூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பிடிபட்டனர்
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்ய பெண் தேடியபோது வேறு ஒரு புரோக்கர் மூலம் சந்தியாவின் போட்டோ கிடைத்தது. இதையறிந்த தனபால் மற்றும் உறவினர்கள் அந்த நபர் மூலம் மதுரையை சேர்ந்த பெண் புரோக்கர் தனலட்சுமியிடம் (45) பேசி திருச்செங்கோட்டில் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி சந்தியா, மதுரையைச் சேர்ந்த பெண் புரோக்கர் தனலட்சுமி, உறவினர் அய்யப்பன், தனலட்சுமியின் உறவினர் ஏ.சி. மெக்கானிக் கவுதம், கார் டிரைவர் ஜெயவேல் ஆகிய 5 பேர் காரில் திருச்செங்கோடு வந்தபோது அங்கிருந்த தனபால் மற்றும் உறவினர்கள் சந்தியா உள்ளிட்ட 5 பேரையும் பிடித்து வேலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் சந்தியா பல புரோக்கர்கள் மூலம் தனபால் உள்பட 6 பேரை ஏமாற்றி திருமணம் செய்ததும், தற்போது 7-வது திருமணம் செய்து நகை, பணம் மோசடி செய்ய திட்டமிட்டதும் தெரியவந்தது.
இதற்கிடையில் அய்யப்பனுக்கு தலையில் காயம் ஏற்பட்டு இருந்ததால் அவரை போலீசார் சிகிச்சைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கிருந்து அய்யப்பன் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.
இதைத்தொடர்ந்து ‘கல்யாணராணி’ சந்தியா, தனலட்சுமி, கவுதம், ஜெயவேல் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களுடைய கூட்டாளிகளான திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த புரோக்கர் பாலமுருகன், மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த ரோஷினி, திருப்பூர் மாவட்டம் சென்னிமலையை சேர்ந்த மாரிமுத்து மற்றும் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிய விருதுநகர் மாவட்டம் மேட்டமலையை சேர்ந்த அய்யப்பன் ஆகிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
7 பேரை திருமணம் செய்தது ஏன்?
சந்தியா 7 பேரை திருமணம் செய்தது பற்றி போலீசாரிடம் உருக்கமான தகவலை கண்ணீர் மல்க கூறினார். அவர் கூறியதாவது:-
ஆபாச வீடியோ
மதுரையை சேர்ந்தவர் திருமண புரோக்கர் பாலமுருகன். அவரது கூட்டாளிகள் ரோஷினி, மாரிமுத்து. இவர்கள் 3 பேருமே என்னை நிர்வாணப்படுத்தி போட்டோ, ஆபாச வீடியோக்களை எடுத்து வைத்துள்ளனர். மோசடி திருமணத்துக்கு சம்மதிக்காவிட்டால், என்னுடைய நிர்வாண படத்தை வெளியிடுவேன் என்றும் குழந்தைகளை கொன்று விடுவேன் என்றும் மிரட்டினார்கள். அதனால்தான் நான் இந்த திருமணங்களுக்கு சம்மதித்தேன். என்னை போல, மேலும் 4 பெண்களும் இவர்களிடம் சிக்கி உள்ளனர். இதில் எவ்வளவு பணம் கிடைத்தாலும், அந்த பணம் முழுவதையும், அவர்களே எடுத்துக்கொள்வார்கள். எங்களுக்கு கொஞ்சம் பணம் மட்டுமே தருவார்கள்.
மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் எதாவது ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தருவார்கள். எனக்கு அப்பா, அம்மா யாரும் இல்லை. அதனால், என்னுடைய அக்கா – மாமாவாக ரோஷினி, மாரிமுத்து 2 பேரும் நடிப்பார்கள். ஒரு கல்யாணம் பேசி முடிப்பதற்கு முன்பேயே, அக்கா – மாமாவாக நடிக்க, என்னுடைய வீட்டிற்கு வந்துவிடுவார்கள்.
பெண் பார்க்க, திருமண ஆசையில் வரும் இளைஞர்களிடம் நான் நெருங்கி பழக வேண்டும். பாசமாக அவர்களிடம் பேச வேண்டும் என்பது கண்டிஷன் போடுவார்கள். அப்படி பேசும்போது, செல்போன், பட்டுப்புடவை, பணம், நகை என ஆசையாக நெருங்கி கேட்டு, சாமர்த்தியமாக அவர்களிடம் வாங்கி கொள்ள வேண்டும். திருமணம் முடிந்ததுமே, இந்த வீட்டை காலி செய்து விட வேண்டும். எனக்கு எந்த கல்யாணம் நடந்தாலும், மாப்பிள்ளை வீட்டில் போட்டோ எடுக்கும்போதுகூட, புரோக்கர்கள் சற்று விலகியே எச்சரிக்கையாக நிற்பார்கள். பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை பிடித்து விட்டது என்று சொல்லி உடனடியாக திருமணத்துக்கு ஏற்பாடு செய்வார்கள். திருமணம் முடிந்து மாப்பிள்ளை வீட்டில் 2 நாட்கள் தங்கி இருந்து, மாப்பிள்ளை வீட்டாரை ஏமாற்றிவிட்டு கிளம்ப வேண்டும். அதற்கு முன்பு போனில் தகவல் தந்துவிட்டு செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்ய வேண்டும். அதற்குள் கார் என்னை அழைத்து செல்ல நள்ளிரவில் அங்கே தயாராக இருக்கும். முதலிரவு முடிந்ததுமே தப்பிச்செல்வதற்கான வாய்ப்பு கிடைத்தால், கிளம்பி விட வேண்டும். ஒருவேளை மாப்பிள்ளையை ரூமில் விட்டுவிட்டு அங்கிருந்து கிளம்ப முடியாத சூழல் ஏற்பட்டால், பாலில் தூக்க மாத்திரை கொடுத்து விட்டு, பொருட்களை வாரிசுருட்டிக்கொண்டு கிளம்ப வேண்டும்.
இதுவரை ஏமாந்த மாப்பிள்ளை வீட்டார், அவமானங்களுக்கு பயந்து, பெரும்பாலும் புகார் கொடுக்கவில்லை. எல்லாரும் பெரிய இடத்து பிள்ளைகள் என்பதால், போலீஸ்வரை விவகாரம் செல்லவில்லை. இதைதான் புரோக்கர்கள் சாதகமாக பயன்படுத்தி கொண்டனர்.
நாமக்கல், கரூர், திருப்பூர், காங்கேயம் பகுதிகளில் திருமண மோசடிகளை செய்துள்ளோம். ஆனால், என்னை கட்டாயப்படுத்தி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய புரோக்கர் பாலமுருகன் மீது நான் ஏற்கனவே மதுரை போலீசில் புகார் தந்தேன். ஆனாலும் போலீசார் அவர் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. திருமணம் என்ற போர்வையில் எனக்கு அவர் பல திருமணங்களை செய்து வைத்து போலீசில் வசமாக சிக்க வைத்து விட்டார்.
இவ்வாறு கண்ணீருடன் சந்தியா கூறினார்.