ஹெலிகாப்டரில் வந்து சிங்கப்பூர் மந்திரி சிக்கல் கோவிலில் தரிசனம்
1 min read
Arrived by helicopter and had darshan at Singapore Mantri Chikal temple
6.10.2022
ஹெலிகாப்டரில் வந்து சிங்கப்பூர் மந்திரி சிக்கல் சிங்கார வேலர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
சிங்கப்பூர் மந்திரி
சிங்கப்பூர் நாட்டின் மூத்த மந்திரியும், தற்போதைய உள்துறை அமைச்சருமான காசிவிசுவநாத சண்முகம் இன்று தமிழகத்திற்கு வருகை தந்தார். சிங்கப்பூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை வந்த உள்துறை அமைச்சர் சண்முகம் அங்கிருந்து சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் நாகப்பட்டினத்திற்கு வந்தார்.
நாகை ஆயுதப்படை மைதானத்திற்கு வருகை தந்த சிங்கப்பூர் அமைச்சர் சண்முகத்தை, மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். சிங்கப்பூர் உள்துறை அமைச்சரின் வருகை ஒட்டி நாகை ஆயுதப்படை மைதானம் முழுவதும் உயர் மட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
சாமி தரிசனம்
அதனைத் தொடர்ந்து காவலர்களின் பாதுகாப்புடன் அங்கிருந்து கார் மூலம் நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோவிலுக்கு சென்ற உள்துறை அமைச்சர் சண்முகம் அங்கு முருகப்பெருமானை தரிசனம் செய்தார்.அதை தொடர்ந்து கோவிலில் சிங்கார சண்முகநாதர் சாமிக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்திலும் சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகம் கலந்து கொண்டு மனம் உருகி வேண்டிக்கொண்டார். நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோவிலுக்கு வந்த சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகத்தின் வருகையை முன்னிட்டு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
சாமி தரிசனத்துக்கு பின்னர் சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகம், அங்கிருந்து நாகை ஆயுதப்படை மைதானத்திற்கு சென்று பின்னர் ஹெலிகாப்டர் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார்.