2 தொகுதிகளில் போட்டியிட தடை விதிக்க தேர்தல் ஆணையம் பரிந்துரை
1 min read
Election Commission recommends banning contesting in 2 constituencies
7.10.2022
‘ஒருவர், இரண்டு தொகுதி களில் போட்டியிடுவதை தடை செய்யும் வகையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்’ என, மத்திய அரசுக்கு, தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
தேர்தலில் போட்டி
தேர்தலில் ஒருவர், பல தொகுதிகளில் போட்டியிடுவதை தடுக்கும் வகையில், 1996ம் ஆண்டு சட்டத்திருத்தம் செய்யப்பட்டது; எனினும், தற்போது, ஒருவர், தேர்தலில் அதிகபட்சம் இரண்டு தொகுதிகளில் போட்டியிட முடியும்.
இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றி பெறும் ஒருவர், ஒரு தொகுதி பதவியை ராஜினாமா செய்வதால், அங்கு, இடைத்தேர்தல் நடத்தும் சூழல் ஏற்படுகிறது. இதனால், அரசுக்கு தேவையற்ற செலவு ஏற்படுகிறது. இதையடுத்து, ‘ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதி களில் போட்டியிடுவதை தடுக்கும் வகையில், சட்டத்திருத்தம் செய்ய வேண்டும்’ என, தேர்தல் ஆணையம், மத்திய சட்ட அமைச்சகத்திற்கு பரிந்துரைத்துள்ளது.
அந்த பரிந்துரையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஒருவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று, ஒன்றை ராஜினாமா செய்வதால், அரசுக்கு தேவையற்ற செலவு ஏற்படுகிறது; இதற்கு தடை விதிக்க வேண்டும். அதற்கு, வாய்ப்பில்லை என்றால், இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்று, ஒன்றை ராஜினாமா செய்யும் நபர், அந்த தொகுதியின் தேர்தல் செலவை ஏற்க வேண்டும்.
இதற்காக, சட்டசபை தொகுதிக்கு, 5 லட்சம் ரூபாயும், லோக்சபா தொகுதிக்கு, 10 லட்சம் ரூபாயும், அவரிடம் வசூலிக்க வேண்டும்; தேர்தலில் போட்டியிடும்போதே, அந்த தொகையை வசூலித்து விட வேண்டும். இதற்கு ஏற்ற வகையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கடந்த, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில், இரண்டு தொகுதி களில் போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றி பெற்ற, பிரதமர், நரேந்திர மோடி, உ.பி., மாநிலம், வாரணாசி தொகுதி, எம்.பி., யாக இருந்து வருகிறார்; குஜராத் மாநிலம், வதோதரா தொகுதி, எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். அதே தேர்தலில், இரண்டு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, சமாஜ்வாதி கட்சி தலைவர், முலாயம் சிங் யாதவ், உ.பி., மாநிலம், அசம்கர் தொகுதி, எம்.பி.,யாக உள்ளார்; மெயின்புரி தொகுதி, எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார்.