ராமேஸ்வரம் – மதுரை சிறப்பு ரயில் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயிலாக மாற்றம்
1 min read
Rameswaram – Madurai special train converted into unreserved special train
11.10.2022
ராமேஸ்வரம் – மதுரை சிறப்பு ரயில் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயிலாக மாற்றப்பட்டது. மேலும்சரக்கு போக்குவரத்து வருமானம் உயர்ந்துள்ளது.
இதுபற்றி தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது :-
சிறப்பு கட்டண ரயில்
பயணிகளின் வசதிக்காக ராமேஸ்வரம் – மதுரை இடையே கூடுதலாக ஒரு வாரம் மும்முறை சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப் பட்டிருந்தது. இந்த ரயில் கடந்த 10 ம்தேதி முதல் இயங்கிக் கொண்டிருக்கிறது. பயணிகளின் வசதிக்காக இந்த ரயில் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயிலாக இயக்கப்படும் என அறிவிக்கப் படுகிறது. இந்த விரைவு ரயிலுக்கு வழக்கமான கட்டணமான ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு ரூ 70, ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு ரூ 55, பரமக்குடியில் இருந்து மதுரைக்கு ரூ 45, மானாமதுரையில் இருந்து மதுரைக்கு ரூ 30 என வசூலிக்கப் படுகிறது. ராமேஸ்வரம் – மதுரை இடையேயான பேருந்து கட்டணம் ரூ 150 என்பது குறிப்பிடத் தக்கது.
சரக்கு போக்குவரத்து வருமானம் உயர்வு
மதுரை கோட்டத்தில் தூத்துக்குடியில் இருந்து உரம், நிலக்கரி, சுண்ணாம்புக்கல் ஆகியவையும் வாடிப்பட்டியில் இருந்து டிராக்டர்களும், சரக்கு ரயில் மூலம் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த சரக்கு போக்குவரத்து வாயிலாக மதுரை கோட்டம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் வரை ரூ 170 கோடி வருமானம் ஈட்டி உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் சரக்கு போக்குவரத்து வருமானம் ரூ 128.44 கோடியாக இருந்தது. இதன் மூலம் கடந்த ஆறு மாத கால சரக்கு போக்குவரத்து வருமானம் 32.38 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 413 சரக்கு ரயில்களில் மதுரை கோட்டத்திலிருந்து சரக்குகள் அனுப்பப் பட்டுள்ளன. தற்போது இது 614 சரக்கு ரயில்களாக உயர்ந்துள்ளது. இந்த அரையாண்டு காலத்தில் ஒட்டுமொத்த தெற்கு ரயில்வே அளவில் சரக்கு போக்குவரத்து வருமானம் ரூ 1766 கோடி ஈட்டப் பட்டுள்ளது. இது கடந்த வருட அரையாண்டு காலத்தை விட 17.42 சதவீதமும் ரயில்வே வாரியம் நிர்ணயத்த இலக்கை விட 38 சதவீதமும் அதிகமாகும்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.