சேந்தமரம் அருகே 7-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
1 min read
7th class student hanged himself near Senthamaram
15.10.2022-
தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே, 7-ம் வகுப்பு மாணவன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவன்
தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே அரியநாயகிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 40). இவர் கேரளாவில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி மாரியம்மாள், கூலி வேலை செய்து வருகிறார். இவர்களது மகன் சீனு (12). அதே ஊரில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் ஒரு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். மற்றொரு மகன் கணேஷ்குமார், அதே பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.
மாரியம்மாள் கூலி வேலைக்கு சென்று விட்டார். மகன்கள் 2 பேரும் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டனர். ஆனால் அதன் பின்னர் வீட்டின் கதவு திறந்து கிடந்தது. அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது பள்ளி சீருடையுடன் சீனு வீட்டில் மின்விசிறியில் கயிற்றினால் தூக்குப்போட்டு இறந்து கிடந்தான்.
ஜன்னல் வழியே இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து சேர்ந்தமரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சீனு உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் வந்து பள்ளி நிர்வாகத்தினரிடம் விசாரணை நடத்தினார். டிஎஸ்பி தெய்வம், கூடுதல் டிஎஸ்பி சார்லஸ் கலைமணி, இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், வேல்கனி ஆகியோர் பள்ளியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.