புதிய தலைவர் அனைத்து முடிவுகளையும் எடுப்பார்-ராகுல் காந்தி எம்.பி. பேட்டி
1 min read
New leader will take all decisions-Rahul Gandhi MP Interview
19.10.2022
புதிய தலைவர் அனைத்து முடிவுகளையும் எடுப்பார் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.
பாதயாத்திரை
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான, 3,570 கி.மீ., துாரம், ‘ஒற்றுமை யாத்திரை’ என்ற பெயரிலான பாதயாத்திரையை காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி சமீபத்தில் துவக்கினார். தமிழகத்தின் கன்னியாகுமரியில் பாதையாத்திரையை துவங்கிய ராகுல், கேரளா, கர்நாடகாவை கடந்து நேற்று ஆந்திராவிற்குள் வந்தார்.
இந்தநிலையில் கர்நூல் மாவட்டத்தில், காங்., தொண்டர்களுடன் நடைபயணம் மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக, 42வது நாளான, இன்று ஆந்திராவில் விஜய நகரம் மாவட்டத்தில் சாகி கிராமம் முதல் பனவாசி கிராமம் வரை ராகுல் கட்சி தொண்டர்களுடன் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.
ஆந்திர மாநிலம் அடோனியில் இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
காங்கிரஸ் தலைவரின் பங்கு குறித்து என்னால் கருத்து கூற முடியாது, அது குறித்து கார்கே (கட்சியின் தலைவர் வேட்பாளர்) கருத்து தெரிவிக்க வேண்டும். எனது பங்கு என்ன என்பதை தலைவர் தான் முடிவு செய்வார். காங்கிரஸ் கட்சியில் தலைவரே உச்சபட்ச அதிகாரம் உள்ளவர். அவரே அனைத்து முடிவுகளையும் எடுப்பார்.
ஒரே கட்சி
ஆந்திரா – தெலுங்கானா பொறுத்த வரையில், ஆந்திரப் பிரதேச மக்களுக்கு மோடி அரசு சில உறுதிமொழிகளை அளித்துள்ளது. அந்த அடிப்படைக் கடமைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். நாட்டில் தேர்தல் நடத்தும் மற்றும் தேர்தல் ஆணையத்தை வைத்திருக்கும் ஒரே அரசியல் கட்சி நாங்கள்தான்.
இவ்வாறு ராகுல்காந்தி கூறினார்.
சாமி தரிசனம்
முன்னதாக இன்று பாதியத்திரை மேற்கொண்டபோது ஆந்திராவில் அதோனியில் உள்ள உள்ள கங்கை பவானி கோயிலில் ராகுல் காந்தி சாமி தரிசனம் செய்தார்.