புல்வாமா பயங்கரவாத தாக்குதலை கொண்டாடிய மாணவருக்கு 5 ஆண்டுகள் சிறை
1 min read
Student who celebrated Pulwama terror attack jailed for 5 years
1.11.2022
புல்வாமா பயங்கரவாத தாக்குதலை கொண்டாடும் வகையில் பேஸ்புக் பதிவிட்ட பொறியியல் மாணவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
புல்வாமா தாக்குதல்
ஜம்மு மற்றும் காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பினர் 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந்தேதி தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இதில் வீரர்கள் 40 பேர் மரணம் அடைந்தனர். இதுதொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், கர்நாடகாவின் பெங்களூரு நகரில் கசராக்னஹள்ளி பகுதியில் வசித்து வரும் பயஸ் ரசீத் என்ற பொறியியல் படித்த மாணவர், 40 வீரர்களை பலி கொண்ட புல்வாமா பயங்கரவாத தாக்குதலை கொண்டாடும் வகையில் பேஸ்புக்கில் பதிவிட்டு உள்ளார். இதனை தொடர்ந்து, கடந்த 2019-ம் ஆண்டு மத்திய குற்ற பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர்.
சிறை தண்டனை
தொடர்ந்து சிறையில் உள்ள அவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள் கோர்ட்டில் நிராகரிக்கப்பட்டன. இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையில் பெங்களூருவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் ஒன்று ரஷீத்துக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டு உள்ளது. ரஷீத்தின் மொபைல் போனை பறிமுதல் செய்த போலீசார் அதனை தடய அறிவியல் ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக கொண்டு சென்றுள்ளனர்.