வங்கக்கடலில் வரும் 9-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
1 min read
A low pressure area will form over the Bay of Bengal on the 9th
4.11.2022
வங்கக் கடலில் வரும் 9-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு
வட கிழக்கு பருவமழை கடந்த மாதம் (அக்டோபர்) 29-ந்தேதி தொடங்கியது. ஆண்டு மழைப்பொழிவில் அதிக மழையை இந்த காலகட்டத்தில்தான் தமிழகம் பெறுகிறது. அந்த வகையில் பருவகாலத்தின் முதல் மழைப்பொழிவு தமிழகத்தின் வடமாவட்டங்களில் கடந்த 30-ந்தேதி முதல் தொடங்கி வெளுத்து வாங்கி வருகிறது.
இந்த நிலையில் வங்கக்கடலில் வரும் 9-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை அவர் சந்திக்கையில் கூறியதாவது:-
தமிழகம் நோக்கி…
இலங்கையை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வரும் 9-ம் தேதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது 10,11ஆம் தேதிகளில் தமிழகம் புதுச்சேரி திசையை நோக்கி நகரக்கூடும். காற்றழுத்தத்தின் நகர்வு வலிமை குறித்து தொடர்ந்து கண்காணித்து தெரிவிக்கப்படும். மீனவர்கள் 8, 9-ம் தேதிகளில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மழை தீவிரம் அடையும்
தமிழ்நாடு வெதர்மேன் அளித்த பேட்டியில் வடகிழக்குப் பருவமழை நவம்பர்9-க்குப் பிறகு தீவிரமடைய வாய்ப்புள்ளதாகதெரிவித்துள்ளார். தற்போது மேலடடுக்கு சுழற்சி காரணமாக வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. நவம்பர் 9-க்குப் பிறகு வடகிழக்குப் பருவமழை தீவிரம் இருக்கும் எனவும் நவம்பர் 9-க்குப் பிறகு காற்றழத்த தாழ்வுப்பகுதி, காற்றழத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், மேலும் புயலாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது எனவும் கூறினார்.