June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ்சாட்சி கூறிய சுவாதிக்கு நீதிபதி எச்சரிக்கை

1 min read

Judge warns Swathi who gave false testimony in Gokulraj murder case

25.11.2022
கோகுல்ராஜ் கொலை வழக்கில் சுவாதியை மதுரை ஐகோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது: வீடியோ காட்டி நீதிபதிகள் கேட்ட கேள்வியால் சுவாதி கண்கலங்கினார். ஆனாலும் உண்மையை கூறுவதற்காகவே கேள்வியை கேட்கிறோம் என்று நீதிபதி கூறினார்.

கோகுல்ராஜ் கொலை

சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். பட்டியலினத்தை சேர்ந்தவர். இவர் தன்னுடன் படித்த நாமக்கலை சேர்ந்து வேறு சமூக பெண்ணை காதலித்துள்ளார். இருவரும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் 23.6.2015-ல் பேசிக் கொண்டிருந்தனர். அதன் பிறகு கோகுல்ராஜ் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம், கிழக்கு தொட்டிப்பாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை வேறு, உடல் வேறாக கோகுல்ராஜ் உடல் கண்டெடுக்கப்பட்டது. வேறு ஜாதி பெண்ணை காதலித்ததால் கோகுல்ராஜ் ஆணவக் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

இந்த வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கார் ஓட்டுநர் அருண் ஆகியோருக்கு 3 ஆயுள் தண்டனை, குமார், சதீஷ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ் ஆகியோருக்கு 2 ஆயுள் தண்டனை, பிரிவு, கிரிதர் ஆகியோருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனை மற்றும் மற்றொரு பிரிவிற்கு 5 ஆண்டு கடுங்காவல், சந்திரசேகரன் என்பவருக்கு ஒரு ஆயுள் தண்டனை வழங்கியது. 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

யுவராஜ் உட்பட 10 பேரும் தண்டனையை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். 5 பேர் விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்து, அவர்களுக்கு தண்டனை வழங்கக்கோரி கோகுல்ராஜ் தாயார் சித்ரா மற்றும் சிபிசிஐடி சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் இன்று விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு, “இந்த வழக்கில் விசாரணையின் தொடக்கத்தில் சுவாதி (கோகுல்ராஜ் உடன் படித்தவர்) நட்சத்திர சாட்சியாக இருந்துள்ளார். அவர் நீதித்துறை நடுவரிடம் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 164 பிரிவின் கீழ் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார். பின்னர் அவர் விசாரணை நீதிமன்றத்தில் சாட்சியளிக்க அழைக்கப்படும் வரை இடைப்பட்ட காலத்தில் ஏதோ நடந்துள்ளது.

இதனால் நீதிமன்ற விசாரணையின் போது அவர் பிறழ்சாட்சியாக மாறியுள்ளார். முந்தைய வாக்குமூலத்தை மறுத்துள்ளார். விசாரணை நீதிமன்றம் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் சுவாதியை பிறழ்சாட்சியாக அறிவித்து அவரது சாட்சியத்தை நிராகரித்துள்ளது. அவர் பிறழ்சாட்சியாக மாறியதற்கு என்ன காரணம் என்பதை கண்டறிய முயலவில்லை. முக்கிய வழக்குகளில் சாட்சிகள் பிறழ்சாட்சியாக மாறுவது வழக்கமாகிவிட்டது.

நட்சத்திர சாட்சிகள் பிறழ்சாட்சியாக மாறும்போது நீதிமன்றங்கள் கண்களை மூடிக்கொண்டிருக்ககூடாது. இந்த வழக்கில் சுவாதியை மீண்டும் விசாரிக்க விரும்புகிறோம். இதனால் சுவாதியை விசாரணை அதிகாரி நாளை (25.11.2022) உயர் நீதிமன்ற கிளையில் நேரில் ஆஜர்படுத்த வேண்டும். சுவாதிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். சுவாதியை யாரும் சந்திக்கவோ, அவருடன் போனில் பேசவோ கூடாது. அவர் எந்தவித பயமும் இல்லாமல் நீதிமன்றத்தில் ஆஜராவதை உறுதிப்படுத்த வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.

ஆஜர்

கோர்ட் உத்தரவுபடி கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது நீதிபதிகள், 2011-2015 வரையிலான கல்லூரி காலங்களில் கோகுல்ராஜை தெரியுமா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு சுவாதி தெரியும் என்று பதிலளித்தார். உண்மையைச் சொல்லுங்கள்: கோகுல்ராஜுடன் பேசுவீர்களா? என்று நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு, அதிகமாக பேசுவேன் என்று சுவாதி பதிலளித்தார்.

தெரியாது

அப்போது நீதிபதிகள், கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்த வீடியோ ஒன்றை காட்சிப்படுத்தினர். அந்த வீடியோப் பதிவில் கோகுல்ராஜும், சுவாதியும் வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது. அந்த வீடியோப்பதிவில் கோகுல்ராஜுடன் வரும் பெண் யார்? என்று நீதிபதிகள் கேட்டனர். அது யாரென்று தனக்கு தெரியவில்லை என்று சுவாதி கூறினார். அது யாரென்று சரியாக நினைவில்லையென்றும் தொடர்ந்து கூறினார். உடனே நீதிபதிகள், இந்த சம்பவம் நடந்து 7 வருடங்கள்தான் ஆகிறது, அந்த சம்பவம் நினைவில் இல்லையா என்றும், வீடியோவில் சல்வார் கமீஸ் அணிந்து வரும் பெண் யார் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், நீங்கள் உண்மையைச் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இத்தனைமுறை கேள்வி கேட்கிறோம் என்றனர்.

கண்கலங்கினார்

அப்போது நீதிமன்றத்தில் சுவாதி கண்கலங்கி அழுகத் தொடங்கிவிட்டார். அப்போது நீதிபதிகள், “நீங்கள் அழுதாலும் உங்களிடம் இருந்து உண்மையை எதிர்பார்க்கிறோம். எனவே நடந்த உண்மையை கூற வேண்டும்” என்று சுவாதியிடம் நீதிபதிகள் கூறினர்.
சிசிடிவி காட்சி மற்றும் புகைப்படத்தில் கோகுல்ராஜ் உடன் இருப்பது தான் இல்லை என்று தொடர்ந்து கூறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என சுவாதிக்கு நீதிபதி எச்சரித்தனர். மேலும் தற்போது வரை நீங்கள் கூறியது அனைத்தும் உண்மைதானா என சுவாதியிடம் நீதிபதி மீண்டும் கேள்வி எழுப்பினர். ஆம் தற்போது வரை தான் சொன்னது அனைத்தும் உண்மை என்று சுவாதி வாக்குமூலம் அளித்தார்.

உண்மையை மறைப்பதா?

மேலும் நீதிபதிகள் உங்களது புகைப்படத்தையே உங்களுக்கு தெரியவில்லை என கூறுவதெல்லாம் ஏற்புடையதல்ல என்று வாழ்க்கையில் முக்கியம் சத்தியமும், நியாயமும், தர்மமும்தான்; சாதி முக்கியமல்ல என்றும் உண்மையை மறைப்பது நீதிமன்ற அவமதிப்பு தான் என நீதிபதிகள் கூறினர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.