10 சதவீத இட ஒதுக்கீடு: சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் சீராய்வு மனு தாக்கல்
1 min read
10 percent seat reservation: DMK filed a review petition challenging the Supreme Court’s decision
5.12.2022
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
10 சதவீத இடஒதுக்கீடு
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு ஏற்கெனவே தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
அந்த மனுவில், இந்த இட ஒதுக்கீடு என்பது ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் எதிரானது என்ற கடுமையான வாதத்தை முன்வைத்துள்ளது. இந்த வழக்கை திறந்தவெளி வழக்கு விசாரணையாக நடத்தவேண்டும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. பொதுவாக சீராய்வு மனுக்கள் நீதிபதியின் அறையில் வைத்து நடைபெறும். ஆனால் அப்படி நடக்கக்கூடாது என்ற முக்கியமான கோரிக்கையையும் திமுக முன்வைத்துள்ளது. இது எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி பிரிவினரிடையே பாகுபாட்டை உருவாக்கக்கூடியதாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளது.
அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை விதிகளுக்கும், நெறிமுறைகளுக்கும் எதிராக இந்த இட ஒதுக்கீடு இருக்கிறது என்பதையும் திமுக சுட்டிக்காட்டியுள்ளது. இந்த மனு மீதான விசாரணையை விரைவில் தொடங்குவதற்கான பணியை வழக்கறிஞர்கள் மேற்கொள்வார்கள் என்று தெரிகிறது. ஏற்கெனவே இந்த வழக்கு ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வில் தீர்ப்பு வெளியான நிலையில், மூன்று நீதிபதிகள் சரியானது என்றும், இரு நீதிபதிகள் சரி இல்லை என்றும் சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது.