ஜி 20 -மாநாடு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம்- மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு
1 min read
G20 – All-Party Meeting on Conference- M.K.Stalin, Edappadi Palaniswami Participation
5.12.2022
ஜி20 மாநாடு தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அனைத்துக்கட்சி கூட்டம்
ஜி 20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. சுழற்சி முறையில் ஆண்டு தோறும் தலைமை பொறுப்பு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு வழங்கப்படும். அந்த வகையில் நடப்பு ஆண்டில் இந்தியாவுக்கு இந்த பெருமை கிடைத்துள்ளது. நாடு முழுவதும் சுமார் 200 கூட்டங்களை நடத்த இந்தியா தயாராகி வருகிறது. ஜி 20 உச்சி மாநாடு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் அமெரிக்கா உள்ளிட்ட ஜி 20 கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். ஜி20 உச்சி மாநாட்டுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக அனைத்து கட்சிகளுடனும் ஆலோசனை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மு.க.ஸ்டாலின்
இந்தக் கூட்டம் இன்று மாலை டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மம்தா பானர்ஜி, ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட அனைத்துக்கட்சி தலைவர்களும் பங்கேற்றனர்.
நாடு முழுவதும் நடைபெற உள்ள ஜி-20 துணை மாநாட்டின் சாராம்சங்கள் குறித்து அனைத்துக்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகள் அமிதஷா, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், பிரகாலத் தோஷி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஜி-20 மாநாடு நடத்துவதற்கு முன்பு துணை மாநாடு நாடு முழுவதும் 200 நகரங்களில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, தஞ்சை, நாகர்கோவில் ஆகிய இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.