மிஸ்டு கால்’ பழக்கம்: காதலிக்க மறுத்த நர்சிங் மாணவி மீது பீர் பாட்டிலால் தாக்கிய வாலிபர் கைது
1 min read
‘Missed call’ habit: Youth arrested for hitting nursing student with beer bottle
10.12.2022
‘மிஸ்டு காலால்’ ஏற்பட்ட பழக்கத்தில் தன்னை காதலிக்க மறுத்த நர்சிங் மாணவியை பீர்பாட்டிலால் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நர்சிங் மாணவி
ஆவடியை அடுத்த பட்டாபிராம் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி, நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்போனில் அவரது தோழியை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் தவறுதாக சென்னையில் உள்ள தனியார் கல்லூரி கேண்டீனில் வேலை செய்து வரும் பண்ருட்டியைச் சேர்ந்த அய்யப்பன் (வயது 23) என்பவருக்கு அழைப்பு சென்றுவிட்டது. உடனடியாக இணைப்பை துண்டித்தார்.
செல்போனில் ‘மிஸ்டு கால்’ கிடப்பதை பார்த்த அய்யப்பன், அந்த எண்ணில் தொடர்பு கொண்டபோது, மாணவி தவறுதலாக போன் செய்தது தெரியவந்தது. அதன்பிறகு அய்யப்பனுக்கும், நர்சிங் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 6 மாதங்களாக இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். ‘வாட்ஸ் அப்’, முகநூல் மூலமும் பழகி வந்தனர்.
காதலிக்க மறுப்பு
இந்தநிலையில் அய்யப்பன் திடீரென நர்சிங் மாணவியை காதலிப்பதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, தான் நட்பாகத்தான் பழகியதாக கூறி அவரது காதலை ஏற்க மறுத்து விட்டதாக தெரிகிறது.
கடந்த வியாழக்கிழமை அம்பத்தூர் ரெயில் நிலையத்தில் இருந்து இறங்கி வெங்கடாபுரம் அருகே கல்லூரிக்கு நடந்து சென்ற மாணவியிடம் தன்னை காதலிக்கும்படி மீண்டும் அய்யப்பன் வற்புறுத்தினார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தாக்குதல்
இதில் ஆத்திரம் அடைந்த அய்யப்பன், தான் மறைத்து வைத்து இருந்த பீர்பாட்டிலை எடுத்து மாணவியின் தலையில் தாக்கினார். இதில் காயம் அடைந்த மாணவி வலியால் அலறி துடித்தார். உடனே அருகில் இருந்த பொதுமக்கள், அய்யப்பனை மடக்கி பிடித்து அம்பத்தூர் போலீசில் ஒப்படைத்தனர். மேலும் மாணவியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவியின் தலையில் தையல் போடப்பட்டது. இது குறித்து அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.