ராகுல் காந்தியின் யாத்திரையை ஒத்திவைக்க மத்திய அரசு வேண்டுகோள்
1 min read
Central government requests postponement of Rahul Gandhi’s yatra
21.22.2022
தேசிய நலன் கருதி ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரையை ஒத்திவைக்க வேண்டும் என்று மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொரோனா பரவல்
உலக அளவில் கொரோனா பாதிப்பு இன்னும் இருக்கிறது. ஜப்பான், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் மேலும் தீவிரம் காட்டுமாறு வலியுறுத்தி உள்ளது.
கொரோனா பாதித்தவரின் ரத்த மாதிரிகளை மாநிலங்கள் மரபணு ஆய்வகத்திற்கு தினசரி அனுப்ப வேண்டும் என அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதி உள்ளார்.
கொரோனா நிலவரம் குறித்து மூத்த அதிகாரிகளுடன் மற்றும் நிபுணர்களுடன் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்தினார்.
ராகுல்காந்தி
இந்த நிலையில் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் கொரோனா நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. ராகுல் காந்தி மற்றும் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டிற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இது தொடர்பாக கடிதம் எழுதி உள்ளார். “ஒற்றுமை யாத்திரையில் முகக்கவசம், சானிடைசர் பயன்படுத்த வேண்டும் கொரோனா நெறிமுறையை பின்பற்றுவது சாத்தியமில்லை என்றால் தேசிய நலன் கருதி ஒற்றுமை யாத்திரையை ஒத்திவைக்க வேண்டும்” என அதில் கூறப்பட்டு உள்ளது.