பஞ்சதந்திரம் படத்தில் நடித் தெலுங்கு நடிகர் கைகலா சத்யநாராயணா மரணம்
1 min read
Telugu actor Kaikala Satyanarayana, who starred in Panchatantram, dies
23.12.2022
பஞ்சதந்திரம், பெரியார் ஆகிய தமிழ் படத்தில் நடித்த தெலுங்கு நடிகர் கைகலா சத்யநாராயணா மரணம் அடைந்தார்.
தெலுங்கு நடிகர்
பிரபல தெலுங்கு நடிகர் கைகலா சத்யநாராயணா தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிலிம் நகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அதிகாலை மரணமடைந்தார். அவருக்கு வயது 87. அவரது மறைவு தெலுங்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1959 ஆம் ஆண்டு வெளியான ‘சிப்பாயி கூத்துரு’ படத்தின் மூலம் அறிமுகமான இவர், ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என தனக்கு கிடைத்த அனைத்து வேடங்களையும் சிறப்பாக செய்து ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தார். இதுவரை 770க்கும் மேற்பட்ட படங்களில் சத்யநாராயணா நடித்துள்ளார். கடைசியாக மகேஷ் பாபுவின் ‘மஹார்ஷி’ படத்தில் நடித்திருந்தார்.
தமிழ்படத்தில்
தமிழில் ‘பஞ்சதந்திரம்’ படத்தில் ஸ்ரீமனின் மாமனாராக சஞ்சீவி ரெட்டி என்ற வேடத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார். இந்தப் படத்தில் கைகலா சத்யநாராயணா பேசிய ‘சின்ன கல்லு, பெத்த லாபம்’ என்ற வசனம் யாராலும் மறக்க முடியாது.
மேலும் ‘பெரியார்’ படத்தில் பெரியார் அப்பா வெங்கடப்ப நாயக்கராக தனது முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களின் ஆதரவை பெற்றார்.
கடந்த 1996 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மச்சிலிபட்டினம் தொகுதியில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினார். இவர் தனது ராமா பிலிம்ஸ் புரொக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பாக ஏராளமான படங்களை தயாரித்து உள்ளார். கேஜிஎப் படங்களை தெலுங்கில் இவர் தான் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோடி இரங்கல்
இந்தநிலையில், தெலுங்கு நடிகர் கைகலா சத்யநாராயணா மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கைகலா சத்யநாராயணா மறைவு வேதனை அளிக்கிறது. தனது குறிப்பிடத்தக்க நடிப்பு திறன் மற்றும் மாறுபட்ட பாத்திரங்களுக்காக தலைமுறைகள் கடந்து பிரபலமானவர் சத்யநாராயணா. இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் ரசிகர்களுடனும் உள்ளன. ஓம் சாந்தி என பதிவிட்டுள்ளார்.