மகாதீபம் ஏற்றிய மலை மீது புனிதநீர் தெளித்து பிராயசித்த பூஜை
1 min read
Puja by sprinkling holy water on the mountain lit by Mahadeepam
26/12/2022
திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவை முன்னிட்டு மகாதீபம் ஏற்றப்பட்ட மலையில், புனிதநீர் தெளித்து பிராயசித்த சிறப்பு பூஜை நடந்தது.
மகாதீபம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவின் நிறைவாக, கடந்த 6ம் தேதி 2,668 அடி உயர மலைமீது மகாதீபம் ஏற்றப்பட்டது. மகா தீபம் ஏற்ற 4,500 கிலோ நெய்பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து 11 நாட்கள்காட்சியளித்த மகாதீபம், கடந்த 16ம் தேதி இரவுடன் நிறைவடைந்தது.
தீபமலையில் மகாதீபத்தை தரிசிக்கவும், நெய் காணிக்கை செலுத்தவும், மலைமீது செல்ல 2,500 பக்தர்களுக்கு மட்டும் இந்த ஆண்டு கட்டுப்பாடுடன் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனாலும், மகாதீபம் ஏற்றும் திருப்பணியை செய்வோர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்கள் ஆயிரக்கணக்கானோர் மலை மீது சென்றனர்.
அதேபோல், மலையில் மகாதீபம் காட்சியளித்த 11 நாட்களும் ஏராளமான பக்தர்கள் மலை மீது சென்று வழிபட்டனர்.
பிராயசித்தம்
திருவண்ணாமலையில் அமைந்துள்ள அண்ணாமலை சுயம்பு வடிவான இறைவனின் திருமேனியாகும். எனவே, மலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. அக்னி பிழம்பாக சிவபெருமான் காட்சியளித்த இறைவுருவான மலை மீது, பக்தர்கள் செல்வது ஆன்மிக மரபு கிடையாது. எனவே, மகாதீபம் ஏற்றுவதற்காகவும், அதனை தரிசிப்பதற்காகவும் மலைமீது சென்றதற்கான பிராயசித்த வழிபாடு ஆண்டு தோறும் தீபத்திருவிழா முடிந்ததும் நடப்பது வழக்கம்.
அதன்படி, மலை மீது ஞாயிறு அன்று புனிதநீர் தெளித்து பிராயசித்த வழிபாடு நடந்தது. அப்போது, ‘உம்முடைய திருப்பணியை நிறைவேற்றவே மலை மீது சென்றோம், எங்களை பொறுத்தருள்க’ என வேண்டி உச்சியில் அமைந்துள்ள சுவாமி பாதத்தில் வழிபாடு நடத்தப்பட்டது.