காங்கிரஸ் எம்.எல்.ஏவும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மகனுமான திருமகன் மரணம்
1 min read
Congress MLA and EVKS Elangovan’s son Thirumahan passes away
4.1.2023
காங்கிரஸ் எம்.எல்.ஏவும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மகனுமான திருமகன் மரணம் அடைந்தார்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகன்
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ஈவேரா திருமகன்(வயது 46). இவர் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மகன் ஆவார். உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மாரடைப்பால் காலமானார்.
திருமகன் நேற்றுமுன்தினம் இரவு வழக்கம் போல படுக்கைக்கு சென்றிருக்கிறார். ஆனால், காலையில் எழுந்திருக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. உடனே குடும்பத்தார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். அவருக்கு மருத்துவ சோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
குடும்பம்
அவரின் உடல் தற்போது ஈரோட்டில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. திருமகன் ஈவெராவுக்கு பூர்ணிமா என்ற மனைவியும் சமணா என்ற மகளும் உள்ளனர். பெங்களூவில் நடைபெற்ற குதிரையேற்றப் போட்டியில் அகில இந்திய அளவில் ஜூனியர் சாம்பியன் கோப்பை பெற்றதற்காக 2 மாதங்களுக்கு முன்பு தான் மகளை முதல்வரிடம் அழைத்துச் சென்று வாழ்த்துப் பெற்றார் திருமகன்.
மு.க.ஸ்டாலின் இரங்கல்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈவெரா திருமகன் மறைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரும் அடைந்தேன். பாட்டனார் சொல்லின் செல்வர் ஈவெகி சம்பத், தந்தையார் ஈவிகேஎஸ் இளங்கோவன் எனப் பாரம்பரியமிக்க அரசியல் குடும்பத்தை சேர்ந்த ஈவெரா திருமகன், 2021-ல்தான் முதல் முறையாக போட்டியிட்டு எம்.எல்.ஏ. வானார்.
அமைதியோடும் பொறுப்புணர்வோடும் அவை மூத்தவர்கள் மீது மரியாதையோடும் அவர் நடந்து கொள்ளும் விதத்தால் அனைவரது அன்புக்கும் உரியவராக திகழ்ந்தார். ஒரு மாதத்துக்கு முன்பு கூட குதிரையேற்றப் போட்டியில் இந்திய அளவில் முதலிடம் பெற்ற தனது மகளை மகிழ்ச்சியுடன் அழைத்துக் கொண்டு வந்து என்னிடம் வாழ்த்துப் பெற்று சென்ற தம்பி திருமகனின் உற்சாகம் ததும்பும் முகம் மனதில் நீங்காமல் நிற்கிறது. தனது அன்புமகனை இழந்துள்ள ஆருயிர் அண்ணன் இளங்கோவன் அவர்களை எப்படி தேற்றுவது எனத் தெரியாமல் தவிக்கிறேன். ஈவெரா திருமகன், மறைவால் துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், தமிழக காங்கிரஸ் கமிட்டியினர், ஈரோடு மக்கள் உள்ளிட்ட் அனைவருக்கும் கனத்த இதயத்துடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில் “46 வயது மட்டுமே நிரும்பிய திருமகன் ஈவெரா மறைவு காங்கிரஸ் பேரியக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது தந்தை இ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்களுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் காங்கிரஸ் கட்சி நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கனத்த இதயத்துடன் அனுதாபத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்து உள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும், தநதை பெரியார் அவர்களின் குடும்ப வாரிசுகளில் ஒருவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மூத்த மகன் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா திடீரென்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியை அறிந்தவுடன் அளவுகடந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் என கூறி உள்ளார்.