அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு
1 min readAIADMK general body case hearing adjourned to tomorrow
4.1.2023
அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.க. வழக்கு
எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜூன் 23-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எந்த முடிவுகளும் எடுக்கப்படாமல் பொதுக்குழு நிறைவடைந்தது. பின்னர், ஜூலை 11-ந்தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் பதவி கலைக்கப்பட்டது.
இதையடுத்து, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, அதிமுக பொதுக்குழு செல்லாது எனவும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு 2 நீதிபதிகள் அமர்வு பொதுக்குழு செல்லும் என்றும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்றும் அதிரடி உத்தரவிட்டது.
சுப்ரீம்கோர்ட்டு
பொதுக்குழு செல்லும் என்று ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையில் நடந்த வாதத்தின்போது, கட்சிக்கு இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டுவிட்டாரா? என்று நீதிபதிகள் கேட்டனர்.
எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார் என்று எடப்பாடி தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.
ஆனால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் செல்லாது என்றால் அனைத்து பதவிகளும் செல்லாது என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் கூறப்பட்டது.
“கழகம் என்றால் என்ன?” என்று நீதிபதிகள் கேட்டனர் “கழகம் என்றால் கட்சி என்று பொருள்” என்று மூத்த வழக்கறிஞர் சி.ஏ.சுந்தரம் விளக்கம் அளித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அதிமுக பொதுக்குழு வழக்கின் விசாரணையை இந்த வாரமே முடிக்க விரும்புகிறோம் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து, அதிமுக பொதுக்குழு வழக்கு அடுத்த விசாரணையை நாளை மதியம் 2 மணிக்கு ஒத்திவைத்தது நீதிபதிகள் உத்தரவிட்டனர்.