June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

இன்னும் 3 வாரங்களில் பாகிஸ்தான் திவாலாகும்-பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கை

1 min read

Pakistan Will Go Bankrupt in 3 Weeks – Economists Warn

13.1.2023
இன்னும் 3 வாரங்களில் பாகிஸ்தான் திவாலாகும் நிலையை எதிர்கொள்ள நேரிடும் என சர்வதேச பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

பொருளாதாரம் பாதிப்பு

கொரோனா பெரும் தொற்று காரணமாக உலக அளவில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதில் இருந்து உலகம் மீண்டு வந்த நிலையில், உக்ரைன் -ரஷியா போர் ஆரம்பமாகி மீண்டும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியை அதிகரித்தது.
அதிலும், பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்த பொருளாதார நெருக்கடியில் அதிகமாக பாதிக்கப்பட்டது. அந்த நாட்டில் அடிப்படை உணவுக்கே தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் கோதுமைக்காக பொதுமக்கள் ஒருவரை ஒருவரை அடித்துக்கொள்ளும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.

விலைவாசி உயர்வு

கடுமையான தட்டுப்பாடுகளால் பாகிஸ்தானின் விலைவாசி உயர்வு 23 சதவீதம் அதிகரித்திருக்கிறது. அத்தியாவசிய உணவுப்பொருளான கோதுமை மாவின் 20 கிலோ பாக்கெட் ரூ.3,100-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ சர்க்கரை ரூ.155-க்கும், ஒரு கிலோ வெங்காயம் ரூ.280-க்கும், ஒரு கிலோ கோழிக்கறி ரூ.700-க்கும் விற்கப்படுகிறது.
ரேஷன் கடைகளைப் பொறுத்தவரையில் அரசால் மானிய விலைக்கு வழங்கப்படும் கோதுமை, சர்க்கரை, நெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை 25 சதவீதம் முதல் 62 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது.
நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்த நிலையில் கிட்டத்தட்ட இலங்கைக்கு நேர்ந்த நிலையைதான் தற்போது பாகிஸ்தான் சந்தித்து வருகிறது. போதிய வரி வருவாய் இல்லாத நிலையில், மக்களின் அடிப்படை தேவைகளை பாகிஸ்தான் அரசால் நிறைவேற்றமுடியவில்லை.

விற்க முடிவு

இந்த நிலையில், கடுமையான பண நெருக்கடியால், பாகிஸ்தானிலுள்ள அரசு அலுவலகங்கள் விற்பனை செய்யப்பட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தவிர அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியிலுள்ள தனது தூதரகத்தையும் பாகிஸ்தான் அரசு விற்க முடிவுசெய்து உள்ளது. சுமார் 4 மில்லியன் டாலர் மதிப்பிலான இந்தத் தூதரகக் கட்டடத்தைப் பலர் ஏலம் எடுப்பதற்கு முன்வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், தங்கள் நாட்டில் கழுதைகள் அதிகம் இருப்பதால் அதை சீனாவுக்கு ஏற்றுமதி செய்து அதன் மூலம் ஏதாவது சமாளிக்க முடியுமா என்றும் பாகிஸ்தான் அரசு ஆலோசித்து வருகிறது.
சர்வதேச நிதியத்திடமும் 650 கோடி டாலரை கடனாக பாகிஸ்தான் அரசு கோரியுள்ளது. எனினும் பாகிஸ்தான் இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வழியில்லை என கூறப்படுகிறது.

திவாலாகும்

இந்த நிலையில் தற்போது அந்த நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு வெகுவாக குறைந்துள்ளது. இதனால் அடுத்த 3 வாரங்களில் பாகிஸ்தான் திவாலாகும் நிலையை எதிர்கொள்ள நேரிடும் என சர்வதேச பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.