June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

அரசு பணிக்கு தமிழில் தேர்ச்சி கட்டாயம் – சட்டசபையில் சட்ட முன்வடிவு நிறைவேற்றம்

1 min read

Proficiency in Tamil is mandatory for government jobs – Passage of bill in assembly

13.1.2023
தமிழகத்தில் அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்தாளில் 40 சதவீதம் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேர்ச்சி

அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்தாளில் 40 சதவீதம் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டத்தை திருத்துவதற்கான மசோதாவை சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தமிழில் போதிய அறிவு இல்லாத விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றிருந்து பணியில் அமர்ந்திருந்தாலும் பணியில் சேர்ந்த தேதியிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் தமிழில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற சட்ட திருத்தம் அதில் கொண்டு வரப்பட்டுள்ளது.
மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும் மாநில பொதுத்துறை நிறுவனங்களிலும் தமிழ் தெரிந்த இளைஞர்களை 100 சதவீதம் ஆள்சேர்ப்பு செய்வதை உறுதி செய்வதற்காக, ஆள் சேர்ப்பு முகாம்கள் நடத்தும் ஆட்சேர்ப்புக்கான அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயம் என கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணய ஆணையத்தால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயம் என அரசாணை சொல்கிறது. டிசம்பர் 2021 அன்று கொண்டுவரப்பட்ட அரசாணைக்கு செயல்வடிவம் கொடுக்கும் விதமாக சட்ட மசோதாவை இன்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் தாக்கல் செய்தார். அதன்படி தமிழக அரசு நிரந்தரப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்தாளில் 40 சதவீதம் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் இதற்கான தமிழ்நாடு அரசு பணியாளர்கள் திருத்த சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஒத்திவைப்பு

இந்த நிலையில் சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
2023-ம் ஆண்டுக்கான முதல் தமிழ்நாடு சட்டசபை கூட்டம் கடந்த திங்கட்கிழமை தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கியது. அப்போது, தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையில் உள்ள 65வது பத்தியை கவர்னர் ஆர்.என். ரவி வாசிக்க மறுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த பத்தியில், சமூகநீ்தி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கியவளர்ச்சி சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல், பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், திராவிட மாடல் ஆட்சி, தமிழ்நாடு அமைதிப் பூங்கா’ என்ற வார்த்தைகள் இடம்பெற்ற நிலையில் அந்த வார்த்தைகளை கவர்னர் ஆர்.என்.ரவி வாசிக்க மறுத்தார். மேலும், மாநில அரசு தயாரித்து கொடுத்த உரையை தாண்டி கவர்னர் மேலும் சில கருத்துக்களை கூறினார். இதனால், அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
இதன் பின்னர், கூட்டம் நிறைவடையும் முன்னரே, இந்திய தேசிய கீதம் இசைக்கும் முன்னரே அவையில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறிவிட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கவர்னர் உரையுடன் சட்டப்பேரவை திங்கட்கிழமை கூடிய நிலையில் தொடர்ந்து பல்வேறு விவகாரங்கள் குறித்து வாதங்கள் நடைபெற்றன. பல்வேறு அறிவிப்புகளும் வெளியாகின.
இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. கவர்னரின் உரைக்க்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதல்-அமைச்சர் உரையாற்றிய பின்னர் சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.