பாலமேடு ஜல்லிக்கட்டில் 23 காளைகளை அடக்கிய தமிழசரனுக்கு கார் பரிசு
1 min read
Car gift to Tamilacharan who tamed 23 bulls in Palamedu Jallikattu
16.1.2023
பாலமேடு ஜல்லிக்கட்டில் 23 காளைகளை அடக்கிய தமிழசரனுக்கு கார் பரிசு வழங்கப்பட்டது.
பாலமேடு ஜல்லிக்கட்டு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. மஞ்சமலைசுவாமி ஆற்று திடலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
போட்டி தொடங்குவதற்குமுன் மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், பூமிநாதன் ஆகியோர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள், விழாக்குழுவினர் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதன்பின்னர் போட்டி தொடங்கியது.
முதலில் வாடிவாசலில் இருந்து கிராமத்து 7 கோவில் காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. அதனை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. அதன்பின்னர் போட்டிக்கான காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டன.
வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் திறம்பட எதிர்கொண்டு அடக்கினர். இதேபோல் வீரர்களின் பிடியில் சிக்காமல் களத்தில் நின்று கெத்து காட்டிய காளைகளையும் பார்க்க முடிந்தது. சிறப்பாக விளையாடி அதிக காளைகளை அடக்கிய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அடுத்தடுத்த சுற்றுகளுக்கு அனுப்பப்பட்டனர். காளைகளை அடக்கிய வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் உடனுக்குடன் வழங்கப்பட்டன.
கார் பரிசு
காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. 9 சுற்றுகளாக நடந்த இப்போட்டியில் மொத்தம் 860 மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. களத்தில் சோர்வடையாமல் நின்று 23 காளைகளை அடக்கிய சின்னப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன் முதலிடம் பெற்றார். அவருக்கு முதலமைச்சர் வழங்கும் கார் பரிசாக அளிக்கப்பட்டது.
19 காளைகளை அடக்கிய பாலமேட்டைச் சேர்ந்த மணி 2ம் இடம் பிடித்தார். 15 காளைகளை அடக்கி பாலமேடு ராஜா மூன்றாம் பரிசை தட்டிச் சென்றார்.
இதேபோல் சிறந்த காளையாக கருப்பண்ணசாமி கோயில் காளை தேர்வு செய்யப்பட்டது. திண்டுக்கல்லைச் சர்ந்த ரமேஷ் என்பவரின் காளை 2வது பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது.