கரும்பை வைத்து விளையாடியபோது மின்சாரம் தாக்கி 4-ம் வகுப்பு மாணவன் பலி
1 min read
Class 4 student dies of electric shock while playing with cane
17/1/2023
கரும்பை வைத்து விளையாடியபோது உயர் அழுத்த மின்கம்பியில் உரசியதால் மின்சாரம் தாக்கி 4-ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் அம்பத்தூரில் நடந்துள்ளது.
மாணவன்
சென்னை அம்பத்தூர் சண்முகபுரம், அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 39). இவர், கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பிரியா. இவர், மூலக்கடையில் உள்ள ஏற்றுமதி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஆகாஷ் (9), சைலேஷ் (4) என 2 மகன்கள். இருவரும் அம்பத்தூர் சண்முகபுரம் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.
இவர்களில் ஆகாஷ், 4-ம் வகுப்பு படித்து வந்தான். ஆகாஷ், கடந்த 13-ந்தேதி வீட்டின் மாடியில் கரும்பை வைத்து விளையாடி கொண்டிருந்தான். அப்போது மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் கரும்பு உரசியது. இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட ஆகாஷ் படுகாயம் அடைந்தான். சுமார் 80 சதவீத தீக்காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் ஆகாஷ் பரிதாபமாக உயிரிழந்தான்.
இது குறித்து அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.