பண்பொழி திருமலை கோவிலில் பக்தர்கள் போராட்டம்
1 min read
Devotees protest at Panbozhi Tirumala temple
22.1.2023
பண்பொழி திருமலை கோவிலில் பக்தர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
தை அமாவாசை
தை அமாவாசையையொட்டி, தென்காசி மாவட்டம் பண்பொழி திருமலை குமாரசாமி கோவிலுக்கு நேற்று பக்தர்கள் சிலர் பால்குடம் எடுத்து வந்தனர். அப்போது அவர்களை கோவிலுக்குள் அனுமதிப்பது தொடர்பாக கோவில் ஊழியர்களுக்கும், பக்தர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.
இதையடுத்து பக்தர்கள் சிலர் கோவில் வளாகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த அறநிலையத்துறை அதிகாரிகள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.
இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், கோவிலில் பக்தர்களின் வசதிக்காக அனைத்து வகையான டிக்கெட்டுகளும் மின்னணு முறையிலேயே வழங்கப்பட்டு வருகின்றன. கோவிலில் நடைபெறும் அனைத்து விஷயங்களையும் இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் நேரடியாக கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணித்து வருகின்றனர்.
பால்குடம் எடுத்து வரும் அனைவரும் டிக்கெட் பெற்று தான் கோவிலுக்குள் செல்ல வேண்டும் என்று நடைமுறை உள்ளது. ஆனால் பால் குடம் எடுத்து வந்த பக்தர்களில் சிலர், டிக்கெட் எடுக்காமல் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கூறி உள்ளனர். அதற்கு கோவில் ஊழியர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. பின்னர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது என்றனர்.