கூடங்குளம் 5வது அணு உலைக்கான கொள்கலன் சோதனை வெற்றி
1 min readContainer test for Kudankulam 5th nuclear reactor successful
2/2/2023
கூடங்குளம் 5வது அணு உலைக்கான கொள்கலன் சோதனை வெற்றிகரமாக நடந்தது.
கூடங்குளம்
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் மற்றும் 2-வது அணு உலைகள் மூலமாக தலா ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து 3 மற்றும் 4-வது அணு உலைகள் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் 5 மற்றும் 6-வது அணு உலைக்கான பணிகளும் நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த திட்டத்தின் 5-வது அணு உலைக்காக தயாரிக்கப்பட்ட உள் உறுப்புகளுடன் கூடிய அணு உலை கலன் ரஷ்யாவில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இந்திய மற்றும் ரஷ்ய நிபுணர்கள் முன்னிலையில், ரஷ்யாவின் வோல்கோடோன்ஸ்கில் உள்ள ரோசாடோம் – அடோமெனெர்கோமாஷ் என்ற எந்திர கட்டுமான பிரிவின் ஒரு பகுதியான ஆட்டம்மாசில் கூடங்குளம் அணு உலைக்காக தயாரிக்கப்பட்ட அணுஉலை கலன் சோதனை செய்யப்பட்டது.
இந்த சோதனையின்போது முதலில் வல்லுநர்கள் 600 டன் தூக்கும் திறன் கொண்ட கிரேனை பயன்படுத்தி, 11 மீட்டர் உயரம் உள்ள வி.வி.இ.ஆர்-1,000 என்ற உலையை அதன் வடிவமைப்பு நிலையில் நிறுவினர். பின்னர், 73 டன் எடையுள்ள 10 மீட்டர் நீளமுள்ள கோர் பீப்பாய், 38 டன் எடையுள்ள கோர் பேபில் மற்றும் 68 டன் எடை உள்ள பாதுகாப்பு குழாய் அலகு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக கீழே இறக்கினர். பின்னர் உலையானது நிலையான உலை மூடியுடன் மூடப்பட்டது.
இதன்காரணமாக அந்த அணு உலையானது மொத்த எடை 603 டன்களை எட்டியது. ஏற்கனவே நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனமானது கடந்த 2013 மற்றும் 2016-ல் முறையே 2 வி.வி.இ.ஆர். உலைகளை தயாரித்து கூடங்குளத்தில் இயக்கி உள்ள நிலையில், தற்போது ரஷ்ய உதவியுடன் இதே திறன் கொண்ட மேலும் நான்கு உலைகளை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.