அதிக ஒலியால் ஆக்ரா கோட்டையில் வெடிப்பு
1 min readExplosion at Agra Fort due to loud noise
14.2.2023
ஜி-20 குழுவினரை வரவேற்க நடத்திய லேசர் ஒளியமைப்பு நிகழ்ச்சியால் வரலாற்று சிறப்பு மிக்க ஆக்ரா கோட்டையில் உள்ள அறையின் மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.
ஜி-20 உச்சி மாநாடு
ஜி-20 உச்சி மாநாட்டை ஓராண்டுக்கு நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது. இதன்படி, நாட்டின் பல்வேறு நகரங்களில் மாநாடு நடைபெற திட்டமிடப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த குழுவினர் இந்தியாவுக்கு வருகை தந்தபடி உள்ளனர். அவர்கள், இந்திய பாரம்பரிய முறையில் மேள தாளங்கள் முழங்க மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் நடத்தி வரவேற்கப்படுகின்றனர்.
இந்த நிலையில், உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஆக்ரா கோட்டையில், பொதுமக்களுடன் பேரரசர் ஜகாங்கீர் உரையாடும் அரங்கான திவான்-இ-ஆம் சுவரின் மேற்கூரை பகுதியில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.
யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட இந்த கோட்டையில் அந்த அமைப்பு வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி, 40 டெசிபல் என அதிகபட்ச ஒலி அளவு அனுமதிக்கப்பட்டு உள்ளது. எனினும், கோட்டை வளாக பகுதிகளில் ஜி-20 குழுவினரை வரவேற்க நடத்திய லேசர் ஒலி மற்றும் ஒளி காட்சிகளுடன் கூடிய நிகழ்ச்சியால், இந்த அனுமதிக்கப்பட்ட ஒலி அளவை விட அதிக சத்தம் எழுந்து உள்ளது என பாரம்பரிய ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.
அதனாலேயே, இந்த விரிசல் விட்டு உள்ளது என அவர்கள் கூறுகின்றனர். இதன்படி, 2 முதல் 6 மி.மீ. வரை மேற்கூரையில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. பிளாஸ்டர் பூச்சுகளும் பெயர்ந்து வந்து உள்ளன. இதனை தொடர்ந்து, சுற்றுலாவாசிகள், பார்வையாளர்கள் யாரும் உள்ளே செல்லாதபடி தடுப்பான்களை அமைத்து தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். நிகழ்ச்சி ஒத்திகையின்போதே அளவுக்கு மீறிய ஒலியுடன் நிகழ்ச்சி நடத்தப்பட்டது என பெயர் வெளியிட விருப்பம் இல்லாத இந்திய தொல்லியல் துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அப்போதே நாங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம் என அவர் கூறியுள்ளார்.