புலி கறியை சமைத்து ஊரே பங்கு போட்டு சாப்பிட்டனர்.
1 min read
The tiger curry was boiled and eaten by the whole village.
20.2.2023
புலி கறியை சமைத்து ஊரே பங்கு போட்டு சாப்பிட்ட சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.
புலி கறி
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் மின்சாரம் பாய்ந்து இறந்த புலியை சமைத்து சாப்பிட்டவர்களை கைது செய்ய வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
ஆக்கபள்ளம் கிராம விவசாயிகள் விளைநிலங்களில் வனவிலங்குகள் புகுந்து சேதம் விளைவிக்காமல் தவிர்ப்பதற்காக சட்டத்துக்கு புறம்பான வகையில் மின்சார வேலி அமைத்துள்ளனர். கடந்த 4 நாட்களுக்கு முன் ஆக்கபள்ளம் அருகே வனப்பகுதியில் பெண் புலி ஒன்றின் கால் தடத்தை கண்டுபிடித்த வனத்துறை அதிகாரிகள் புலி நடமாட்டத்தை கண்டுபிடிப்பதற்காக அந்த பகுதியில் கேமராக்களை பொருத்தி இருந்தனர்.
ஆனால் அதற்கு முன்னதாகவே அந்த புலி மின்சாரம் தாக்கி இறந்து கிராம மக்களுக்கு உணவாகி விட்டது. புலியின் கறியை பங்கு போடுவதில் ஆக்கபள்ளம் கிராம மக்கள் இடையே பிரச்சனை ஏற்பட்டு இந்த விஷயம் வனத்துறையினருக்கு தெரிய வந்தது.
வாக்குவாதம்
அக்கிராமத்திற்கு நேற்று சென்ற வனத்துறையினர் புலி மாமிசம் சாப்பிட்டவர்கள் என்று கருதப்படும் சிலரை வனத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்ல முயன்றனர். இதனால் கிராம மக்களுக்கும் வனத்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், 12 பேரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அவர்கள் புலிக்கறி சாப்பிட்டதை ஒப்புக் கொண்டனர். மேலும் புலி தோலை அங்குள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் வீசிவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதன் அடிப்படையில் புலித்தோலை மீட்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். புலி மாமிசம் சாப்பிட்ட மேலும் பலர் அந்த கிராமத்தில் இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் அவர்களையும் கைது செய்யும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.