தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் – நடவடிக்கை மேற்கொள்ள மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல் அமைச்சர் கடிதம்
1 min read
First Minister’s letter to Union Minister of External Affairs to take action on attack on Tamil Nadu fishermen
23.2.2023
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடந்த சம்பவத்தில் நடவடிக்கை மேற்கொள்ள மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மீனவர் மீது தாக்குதல்
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் இன்று (23.02.2023) நடத்திய தாக்குதல் சம்பவத்தை சுட்டிக்காட்டி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்குகடிதம் எழுதியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியைச் சேர்ந்த 6 மீனவர்கள் கடந்த 21.02.2023 அன்று தரங்கம்பாடி மீனவ கிராமத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றதாகவும், பாரம்பரிய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது. இன்று (23.02.2023) அதிகாலை 4.30 மணியளவில் இலங்கைக் கடற்படையினர் அவர்களை இரும்பு கயிறுகளைக் கொண்டு தாக்கியதாகவும் அவர்களின் மீன்பிடி உபகரணங்கள், இரண்டு பேட்டரிகள். என்ஜின் மற்றும் ஜி.பி.எஸ் கருவிகளை எடுத்துச் சென்றுவிட்டனர் என்றும் இத்தாக்குதலில் காயமடைந்த ஐந்து மீனவர்கள் தரங்கம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் முதல் அமைச்சர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கண்டனம்
இந்தத் தாக்குதல், அனைத்து சர்வதேச விதிமுறைகள் மற்றும் மரபுகளை அப்பட்டமாக மீறுவதாகவும், பாக் வளைகுடா பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை இலங்கைக் கடற்படை தொடர்ந்து மீறி வருவதுடன், நமது மீனவர்களுக்கு கடுமையான காயங்களையும், பொருளாதார இழப்புகளையும் அடிக்கடி ஏற்படுத்துவதையும் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் இலங்கை கடற்படையினரின் இத்தகைய வன்முறைச் செயல்கள் அதிர்ச்சியளிப்பதுடன் கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.
நமது மீனவர்கள் தமது வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிப்பதை மட்டுமே நம்பியுள்ளனர் என்றும் மீனவர்கள் மீது அடிக்கடி தாக்குதல்கள் நடத்தப்படுவது மீனவர்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் முதல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.