தரங்கம்பாடி மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்-ஆஸ்பத்திரியில் அனுமதி
1 min read
Sri Lankan Navy attack on Tharangambadi fishermen-admission to hospital
23.2.2023
தரங்கம்பாடி மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தினர். இதில் காயம் அடைந்த மீனவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
தரம்பாடி மீனவர்கள்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்தவர் வேல்முருகன். இவருக்கு சொந்தமாக பைபர் படகு உள்ளது. அந்தப் படகு நேற்று முன்தினம் இரவு மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்றுள்ளது.
அந்தப் படையில் அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் அருண் குமார் மாதவன், காசி, முருகன் மற்றும் படகின் உரிமையாளர்கள் உள்ளிட்டோர் சென்றுள்ளனர். அவர்கள் இன்று அதிகாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்துள்ளனர்.
கொடூர தாக்குதல்

அப்போது அங்கு இலங்கை கடற்படையினர் வந்துள்ளனர். அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் வளையை பறித்துக் கொண்டதுடன் இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
அந்த தாக்குதலில் ஐந்து மீனவர்கள் பலத்த காயமடைந்தனர். அவர்களுக்கு உடலில் ரத்தக் கட்டுகள் ஏற்பட்டதுடன் ஒரு மீனவருக்கு லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
இன்று கரை திரும்பிய மீனவர்கள் தாக்குதலில் படுகாயம் அடைந்ததால் தரங்கம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்றுக் கொண்டனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக பொறையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் இலங்கை கடற்படையினர் அந்த மீனவர்கள் சென்ற பைபர் படையில் இருந்த இன்ஜினை பறித்துக் கொண்டு அவர்களை கொடூரமாக தாக்கியதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். படுகாயம் அடைந்த மீனவர்களுக்கு பொறையாறு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் மீன்வளத் துறையினர் மற்றும் கடலோர காவல் குழும காவல் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர். நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கிய சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து இவ்வாறு மீனவர்கள் தாக்கப்படுவது சக மீனவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.