நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு அய்யா வைகுண்ட சுவாமி அவதார தின விழா ஊர்வலம்
1 min read
Ayya Vaikunda Swami Incarnation Day Festival Procession from Nagercoil to Samitop
4.3.2023
நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு அய்யா வைகுண்ட சுவாமி அவதார தின விழா ஊர்வலம் நடந்தது. சில பக்தர்கள் தலையில் சந்தனக்குடம் எடுத்துச் சென்றனர். ஊர்வலத்தின் முன்னால் சிறுமிகள் கோலாட்டம் அடித்தபடி சென்றனர்.
அவதார தின விழா
அய்யா வைகுண்ட சாமி யின் 191-வது அவதார தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் அய்யா வழி பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்பட்டு இருந்தது. அய்யாவின் அவதார தின விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்து வாகன பேரணி நேற்று தொடங்கியது. இந்த பேரணி இரவில் நாகர்கோவில் நாக ராஜா கோவில் திடலை வந்தடைந்தது.
தொடர்ந்து அங்கு மாசி மாநாடு நடை பெற்றது. மாநாட்டுக்கு பாலஜனாதிபதி தலைமை தாங்கினார். மேயர் மகேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர். முன்னதாக மாலையில் சாமி தோப்பு தலைமை பதியில் இருந்து மகாதீபம் கொண்டு வரப்பட்டு ஆதலவிளை வைகுண்ட மாமலையில் ஏற்றப்பட்டது.
ஊர்வலம்
இன்று அதிகாலை நாகராஜா கோவில் திடலில் இருந்து சாமிதோப்புக்கு அவதார தின ஊர்வலம் தொடங்கியது. இதில் பால ஜனாதிபதி, விஜய் வசந்த் எம்.பி., உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக பக்தர்கள் நேற்று இரவே நாகராஜா கோவில் திடலில் குவிந்திருந்தனர். அவர்கள் இன்று காலை அய்யா சிவ…சிவ.. அரகர…அரகரா… என்ற பக்தி கோஷத்துடன் சாமிதோப்பை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
காவி உடை அணிந்த அவர்கள் கைகளில் காவி கொடிகளை ஏந்தியபடி சென்றனர். சில பக்தர்கள் தலையில் சந்தனக்குடம் எடுத்துச் சென்றனர். ஊர்வலத்தின் முன்னால் சிறுமிகள் கோலாட்டம் அடித்தபடி சென்றனர்.
நாகராஜா கோவிலில் இருந்து கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், வழுக்கம்பாறை, ஈத்தன்காடு வழியாக சாமி தோப்புக்கு ஊர்வலம் சென்றது. ஊர்வலம் சென்ற பகுதிகளில் எல்லாம் பக்தர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். வெற்றிலை,பாக்கு, பழம் என சுருள் வைத்து பல இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஊர்வ லத்தில் பங்கேற்றவர்களுக்கு வழிநெடுக மோர், குளிர்பானம், பானகரம் வழங்கப்பட்டன.
பணிவிடை
சாமிதோப்பு தலைமை பதியை ஊர்வலம் சென்றடைந்ததும் அங்கு அய்யா வுக்கு பணிவிடை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால் தலைமைபதியில் இன்று பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து மட்டு மின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான அய்யாவழி பக்தர்கள் சாமிதோப்பில் திரண்டனர். இதனால் திரும்பிய இடமெல்லாம் மக்கள் தலைகளே காணப்பட்டன.
நேற்று இரவே ஆயிரக்க ணக்கானோர் தரிசனத்திற்கு குவிந்ததால், வடக்குவாசல் பள்ளியறை பதி மற்றும் 4 ரத வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திரு ந்தனர்.ஒருவர் தரிசனம் பெற சுமார் 2 மணி நேரம் வரை ஆனது.
இன்று இரவு சாமிதோப்பு கலையரங்கில் அய்யாவழி மாநாடு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
விழாவை முன்னிட்டு போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. ஈத்தங்காடு-சாமிதோப்பு சாலையில் இயக்கப்படும் பஸ் போக்குவரத்து இன்று காலை முதல் மாற்றுப்பாதை யில் இயக்கப்பட்டது. மேலும் பதி வளாகப் பகுதியில் வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு இருந்தது. விழாவை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் மேற்பார்வையில் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சாமிதோப்பு பதி மட்டுமல்லாமல் மாவட்டம் முழுவதும் உள்ள பதிகள்,நிழல் தாங்கல்களிலும் இன்று அய்யா அவதார தின சிறப்பு வழிபாடுகள் நடந்தன. உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, பணிவிடை உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் வாகன பவனியும் நடந்தது.