நாகாலாந்து முதல்-மந்திரியாக 5-வது முறையாக நெய்பியு ரியோ பதவியேற்பு
1 min read
Naibiu Rio sworn in as Chief Minister of Nagaland for the 5th term
7.3.2023
நாகாலாந்து முதல்-மந்திரியாக 5-வது முறையாக நெய்பியு ரியோ இன்று பதவியேற்று கொண்டார்.
நாகலாந்து
நாகாலாந்து மாநிலத்தில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த பிப்ரவரி 27-ந்தேதி தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில், பா.ஜ.க. 12 இடங்களிலும் கூட்டணி கட்சியான என்.டி.பி.பி. 25 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதனால், ஆட்சி அமைக்க தேவையான இடங்களை விட கூடுதலான இடங்களில் பெரும்பான்மை பெற்று மீண்டும் கூட்டணி ஆட்சி அமைய வழிவகை ஏற்பட்டது. இந்நிலையில், கூட்டணி கட்சிகளின் சார்பில் என்.டி.பி.பி. கட்சியை சேர்ந்த நெய்பியு ரியோ 5-வது முறையாக முதல்-மந்திரியாக பதவியேற்க முடிவானது. முன்னதாக மூத்த அரசியல் தலைவர் ஜாமிர் மூன்று முறை முதல்-மந்திரியாக பதவி வகித்துள்ளார். வடக்கு அங்காமி தொகுதியில் போட்டியிட்ட முதல்-மந்திரி நெய்பியு ரியோ 17,045 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து, நாகாலாந்து முதல்-மந்திரியாக 5-வது முறையாக நெய்பியூ ரியோ பதவியேற்கும் நிகழ்ச்சி இன்று கோஹிமா நகரில் தொடங்கியது. ரியோ முதல்-மந்திரியாக பதவி பிரமாணம் செய்து கொண்டதுடன், ரகசிய காப்பு பிரமாணமும் எடுத்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, நாகாலாந்து கவர்னர் இல.கணேசன், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.