மாமல்லபுரம் கடற்கரையில் ஒரே நாளில் 15 ஜோடிகளுக்கு திருமணம்
1 min read
15 couples get married in one day at Mamallapuram beach
8.3.2023
மாமல்லபுரம் கடற்கரையில் குடில்கள் அமைத்து தங்கிய இருளர்களில் ஒரே நாளில் 15 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.
மாசி மகம்
மாசிமகத்தையொட்டி ஆண்டு தோறும் இருளர்கள் ஏராளமானோர் மாமல்லபுரம் கடற்கரை கோவிலுக்கு தெற்கு பக்க கடற்கரையில் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்து ஆயிரக்கணக்கில் திரள்வது வழக்கம். அவர்கள் அங்கு தங்கள் குல தெய்வமான கன்னியம்மனை வணங்கி தங்கள் உறவு முறைக்குள் திருமணம் மற்றும் நிச்சயதார்த்தம் போன்ற சடங்குகளை செய்வது வழக்கம்.
மேலும் தங்கள் குலதெய்வமான கன்னியம்மன் மாசிமகத்தன்று கடற்கரையில் அருள்பாலிப்பதாக நம்புகின்றனர். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த இருளர் இன மக்கள் மாசிமகத்துக்கு ஒரு நாள் முன்னதாகவே மாமல்லபுரம் கடற்கரையில் ஒன்று கூடுகின்றனர். தாங்கள் கொண்டு வந்த தென்னங்கீற்று மற்றும் துணிகளால் குடில்கள் அமைத்து தங்குகின்றனர். அங்கேயே சமைத்தும் சாப்பிடுகின்றனர். இரவு முழுவதும் கலைநிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்கின்றனர்.
வழிபாடு
கடற்கரையில் தங்கள் குலதெய்வமான கன்னியம்மனுக்கு மணலில் 7 படி அமைத்து தேங்காய், பூ, பழம் வைத்து வழிபாடு செய்கின்றனர். கழுத்தில் நூல் மாலை அணிந்து ஒரு வித சத்தம் எழுப்பி சாமி ஆடி குறிகேட்கின்றனர். காது குத்தல், மொட்டை அடித்தல் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். குறிப்பாக கடலில் மிதக்கும் வகையிலும், ராட்சத அலையில் மோதும் வகையில் உள்ள மகிஷாசூரமர்த்தினி குடைவரை கோவிலில் உள்ள மகிஷசூரனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வணங்குகின்றனர்.
திருமணம்
அதேபோல் கடந்த ஆண்டு இதே மாசிமகத்தன்று நிச்சயம் செய்த ஜோடிகளுக்கு எளிமையான முறையில் நேற்றுமுன்தினம் மாமல்லபுரம் கடற்கரையில் உற்றார், உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்தவுடன் உறவினர்கள் மொய்காசும் வழங்கினர் அப்போது தங்கள் பாரம்பரிய பாடல்களை பாடியும் மணமக்களை மகிழ்வித்தனர்.
இந்த ஆண்டு மொத்தம் 15 இருளர் இன ஜோடிகள் கடற்கரையில் தனித்தனியாக திருமணம் செய்து கொண்டனர். மாமல்லபுரம் தெற்கு பக்க கடற்கரையில் இருளர்கள் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டிருந்ததை காண முடிந்தது.