ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் செந்தில் முருகன் எடப்பாடி பழனிசாமி பக்கம் சேர்ந்தார்
1 min read
O. Panneerselvam supporter Senthil Murugan sided with Edappadi Palaniswami
9.3.2023
ஓபிஎஸ் அணியில் இருந்து நீக்கப்பட்ட செந்தில்முருகன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
செந்தில் முருகன்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தனது தரப்பு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகன் எடப்பாடி பழனிசாமி பக்கம் தாவியதால் அவர் மீது ஓ.பன்னீர்செல்வம் நடவடிக்கை எடுத்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது தரப்பு வேட்பாளராக வாபஸ் பெறுவார் என்று அறிவித்தார். ஆனால் அந்த தேர்தலில் செந்தில் முருகன் மனு சரியாக பூர்த்தி செய்யப்படாததால் நிராகரிக்கப்பட்டது. இந்தநிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக வலம் வந்த செந்தில் முருகன் திடீரென்று அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தன்னை அ.தி.மு.க.வில் இணைத்துக்கொண்டார். அவரை எடப்பாடி பழனிசாமி மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர். செந்தில் முருகன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்ததால் அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நீக்கம்
இது தொடர்பாக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. கொள்கை-குறிக்கோள்களுக்கும், கேட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் அமைப்பு செயலாளர் பி.செந்தில் முருகன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். அவருடன் நிர்வாகிகள் யாரும் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.